பெருந்துறை தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்


பெருந்துறை தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள்
x
தினத்தந்தி 19 July 2018 11:15 PM GMT (Updated: 19 July 2018 7:45 PM GMT)

பெருந்துறை தொகுதியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் தோப்பு வெங்கடாசலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

பெருந்துறை,

பெருந்துறை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட மூங்கில்பாளையம் ஊராட்சியில் உள்ள தாசம்பாளையத்தில் அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் தோப்பு என்.டி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடத்தையும் திறந்து வைத்தார். இதேபோல் பெரிய வீரசங்கிலி ஊராட்சியில் உள்ள கைக்கோளபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கட்டப்பட்ட சத்துணவு கூட சமையல் அறை கட்டிடத்தையும் அவர் திறந்து வைத்தார். மேலும் ரூ.1 கோடி மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தோப்பு என்.டி. வெங்கடாசலம் எம்.எல்.ஏ.வால் தொடங்கி வைக்கப்பட்டது.

அதன்படி விஜயபுரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம், மேக் கூரில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சிங்காநல்லூர் ஊராட்சியில் உள்ள கருப்பம்பாளையம் ஆதி காலனியில் அங்கன்வாடி மைய கட்டிடம், பாண்டியம்பாளையம் ஊராட்சியில் உள்ள கொளத்துப்பாளையத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளிட்ட கட்டுமானப் பணிகளையும், சீனாபுரம் ஊராட்சியில் பெருந்துறை குன்னத்தூர் சாலை முதல் எல்லப்பாளையம் செல்லும் தார் சாலையை புதுப்பித்தல் ஆகிய பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிகளில் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் விஜயன் என்கிற ராமசாமி, வேளாண் விற்பனை கூட்டுறவு கடன் சங்க துணை தலைவர் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story