காட்பாடி ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து அதிகாரி ஆய்வு


காட்பாடி ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 24 July 2018 11:15 PM GMT (Updated: 24 July 2018 7:37 PM GMT)

காட்பாடி ரெயில் நிலையத்தில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து சென்னை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் சோர்ட் ஆய்வு செய்தார்.

காட்பாடி,

தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து சென்னை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் சோர்ட் நேற்று காட்பாடி பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது துருப்பிடித்த பகுதிகளை மாற்ற உத்தரவிட்டார்.

காட்பாடி வழியாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகிறது. காட்பாடியில் இருந்து அரக்கோணம் மார்க்கமாக சென்னை செல்லும் ரெயில்கள் சில நேரங்களில் அரக்கோணம் உள்பட சில இடங்களில் தடம் புரண்டு விடுகிறது. இதனால் ரெயில்கள் தாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டு பயணிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய சென்னை கோட்ட ரெயில்வே கூடுதல் மேலாளர் சோர்ட் நேற்று காலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு வந்தார். அவர் காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ள அனைத்து பிளாட்பாரத்திற்கும் சென்று பார்வையிட்டு தண்டவாளங்களை ஆய்வு செய்தார். தண்டவாளங்கள் உறுதியாக இருக்கிறதா?, துருப்பிடித்திருக்கிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

சில இடங்களில் தண்டவாளங்கள் துருப்பிடித்து காணப்பட்டது. அதை பார்த்த அவர் துருப்பிடித்த பகுதிகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் காட்பாடி ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் பார்வையிட்டார். அப்போது காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத், டிவிஷனல் என்ஜினீயர் அருண் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தொடர்ந்து அவர் சேவூர் உள்பட பல்வேறு பகுதிகளில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

Next Story