மக்களை தேடி சென்று மனுக்கள் பெறும் முகாம் தம்பிதுரை- அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு


மக்களை தேடி சென்று மனுக்கள் பெறும் முகாம் தம்பிதுரை- அமைச்சர் விஜயபாஸ்கர் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 July 2018 11:00 PM GMT (Updated: 28 July 2018 8:52 PM GMT)

கிருஷ்ணராயபுரம் ஒன்றிய பகுதியில் நடந்த, மக்களை தேடி சென்று கோரிக்கை மனு பெறும் முகாமில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிருஷ்ணராயபுரம்,

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்தில் மகாதானபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டுமகாதானபுரம் கடைவீதி, மாரியம்மன் கோவில், அக்ரஹாரம், தீர்த்தாம்பாளையம் ஆகிய பகுதிகளிலும், கம்மநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட கம்மநல்லூர் மாரியம்மன் கோவில், பொய்யப்புதூர் ஆகிய பகுதிகளிலும், திருக்காம்புலியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகம், மேட்டு திருக்காம்புலியூர் கடைவீதி, எழுதியாம்பட்டி, மலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமையில் நேற்று பொதுமக்கள் வசிக்கும் இடத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனுக்கள் பெறும் முகாம் நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் பேசியதாவது:-

மக்கள் நலனில் அக்கறை கொண்டு தான் மக்களை சந்தித்து, கோரிக்கை மனுக்களை பெற்று அவற்றின் மீது உரிய காலத்தில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த மனுக்களை பெறுவதுடன் அப்பகுதியில் மக்களுக்கு தேவையான சுகாதாரம், மின்சாரம், குப்பைகள் அகற்றுதல், கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் போன்ற கோரிக்கைகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொண்டு அவர்களுக்கு பதில் அளிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் ஒவ்வொரு பகுதியிலும் மத்திய, மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுள்ள நலத்திட்டங்களை பட்டியலிட்டு பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

தொடர்ந்து போக்கு வரத்துத்துறை அமைச்சர் பேசியதாவது:-

மக்களை தேடி சென்று மனுக்களை பெறும் இந்த முகாமில் பெரும்பாலும் பட்டா மாறுதல், முதியோர் உதவித்தொகை, குடிநீர், மின்விளக்கு தொடர்பாக மனுக்கள் வரப்பெறுகின்றன. அனைத்து மனுக்களும் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு முறையாக அனுப்பப்பட்டு விரைவில் தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து மாவட்ட கலெக்டர் பேசுகையில், பொதுமக்களின் கோரிக்கைகளை பெற்று நிறைவேற்றுவதற்காக வாரந்தோறும் திங்கட்கிழமையன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வெள்ளிக்கிழமை தோறும் அம்மா திட்ட முகாம், மாதந்தோறும் மக்கள் தொடர்பு முகாம் என பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்துடன், இ-பொது சேவை மையங்கள், அம்மா அழைப்பு மையம், இணையதளம் வாயிலாக கோரிக்கை மனுக்கள் அளித்தல் போன்றவை நடைபெற்று வருகிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

இதில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, வருவாய் கோட்டாட்சியர் லியாகத்அலி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் முத்துமாணிக்கம் (ஊரகம்), வட்டாட்சியர் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புவனேஸ்வரி, பிரபாகரன், அ.தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் பி.சிவசாமி, இளைஞரணி செயலாளர் வி.வி.கே.ஜெயராஜ், தொழிற்சங்க செயலாளர் பொரணி கணேசன், கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.மணி, முன்னாள் மாணவரணி செயலாளர் என்.தானேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கரூர் காந்திகிராமம் அருகில் அரசு மருத்துவக்கல்லூரி கட்டிட கட்டுமானப்பணிகளை பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட கலெக்டர் அன்பழகன் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது பாராளுமன்ற துணை சபாநாயகர் கூறுகையில், கரூர் காந்தி கிராமத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரூ.269 கோடியே 59 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் திட்டமாகும். கரூரில் 800 படுக்கைகள் வைக்கப்படுகிறது. மேலும் 150 மாணவ- மாணவிகள் இதில் மருத்துவம் பயிலலாம். அடுத்த ஆண்டு மார்ச்சுக்குள் பணிகள் முடித்திட ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக இந்த ஆண்டு இறுதிக்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் கரூர் மாவட்ட மக்களுக்கு மட்டுமின்றி கரூரை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த மக்களுக்கும் பெரிதும் பயன்படும் வகையில் அமையும். இக்கட்டுமான பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டு மருத்துவமனையும், கல்லூரியும் இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். 

Next Story