முதல்-மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்


முதல்-மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்
x
தினத்தந்தி 6 Aug 2018 10:23 PM GMT (Updated: 6 Aug 2018 10:23 PM GMT)

முதல்-மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என்று மந்திரி யு.டி.காதர் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக நகர வளர்ச்சி மற்றும் வீட்டு வசதித்துறை மந்திரி யு.டி.காதர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-மந்திரியின் நகர வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 60 ஆயிரம் வீடுகள் கட்டப்படுகின்றன. இதற்கான டெண்டர் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இதில் 22 ஆயிரம் வீடுகள் வட கர்நாடகத்திற்கு ஒதுக்கப்பட்டு உள்ளன. வருகிற 12-ந் தேதி உப்பள்ளியில் நடைபெறும் விழாவில் இந்த வீடு கட்டும் திட்டத்தை முதல்-மந்திரி குமாரசாமி தொடங்கி வைக்கிறார். 8 மாதங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்படும்.

இந்த திட்டத்தில் பயனாளிகளுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும். மத்திய-மாநில அரசுகள் இணைந்து மானியத்தொகையை வழங்குகிறது. வங்கிகளில் பயனாளிகளுக்கு கடன் கிடைக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்கும். பெங்களூருவில் ஏழை மக்களுக்காக ஒரு லட்சம் வீடுகள் கட்டும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 55 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.

மீதமுள்ள 45 ஆயிரம் வீடுகள் கட்டும் பணிக்கு டெண்டர் விடப்படும். இந்த திட்டத்தின் கீழ் 2 படுக்கை அறை மற்றும் ஒரு படுக்கை அறை கொண்ட வீடுகள் கட்டப்படுகின்றன. 2 படுக்கை அறை வீடுகளுக்கு மானியம் கிடையாது. ஒரு படுக்கை அறை வீடுகளுக்கு மட்டுமே அரசின் மானியம் வழங்கப்படும். இவ்வாறு யு.டி.காதர் கூறினார்.

Next Story