காசநோய் கண்டறிய ஆய்வுக்கூட வசதியுடன் அதிநவீன வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்


காசநோய் கண்டறிய ஆய்வுக்கூட வசதியுடன் அதிநவீன வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 9 Aug 2018 10:45 PM GMT (Updated: 9 Aug 2018 9:45 PM GMT)

ஆய்வுக்கூட வசதியுடன் காசநோய் கண்டறியும் அதிநவீன வாகனத்தை மாவட்ட கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

சேலம்,

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துகள் துறையின் திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத்திட்டத்தின் சார்பில் சிறப்பு நடமாடும் காசநோய் கண்டறியும் அதிநவீன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள வாகனத்தை மாவட்ட கலெக்டர் ரோகிணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும் போது கூறியதாவது:-

காசநோய் காற்றில் பரவக்கூடிய தொற்று நோய் ஆகும். இது பரம்பரை வியாதி அல்ல. இந்நோயின் அறிகுறிகள் 2 வார இருமல், பசியின்மை, எடை குறைதல், மாலை நேர காய்ச்சல், நெஞ்சு வலி மற்றும் சளியில் ரத்தம் வெளியேறுதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே சளி பரிசோதனை செய்ய வேண்டும்.

சளி பரிசோதனையில் காசநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டால் 6-8 மாத டாட்ஸ் சிகிச்சை மூலம் முற்றிலும் குணப்படுத்தலாம். காசநோய்க்கான பரிசோதனை, ஆலோசனை மற்றும் டாட்ஸ் சிகிச்சை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள் ஆகிய இடங்களில் இலவசமாக கிடைக்கிறது.

தற்போது தமிழகத்தின் அனைத்து கிராமப்புற பகுதிகளிலும் காசநோயால் பாதிக்கப்பட்டோரை ஆரம்ப நிலையிலேயே அவரவர்கள் வசிக்கும் பகுதிகளிலேயே சென்று கண்டுபிடித்து சிகிச்சை அளிக்கும் விதமாக கடந்த 24.03.2018 அன்று சிறப்பு நடமாடும் காசநோய் கண்டறியும் அதிநவீன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள வாகனத்தை முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வாகனம் சேலம் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் நாளை (சனிக்கிழமை) வரை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காரிப்பட்டி காசநோய் பிரிவிலும், கொங்கணாபுரம் காசநோய் பிரிவிலும், சரக்கப்பிள்ளையூர் காசநோய் பிரிவிலும், தம்மம்பட்டி காசநோய் பிரிவிலும், சேலம் கிச்சிப்பாளையம் மற்றும் பனமரத்துப்பட்டி காசநோய் பிரிவிலும், கொளத்தூர் காசநோய் பிரிவிலும் அப்பகுதி மக்களுக்கு காசநோய்க்கான பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படும்.

இந்த காசநோய் கண்டறியும் அதிநவீன ஆய்வுக்கூடம் அமைந்துள்ள வாகனத்தின் மூலம் காசநோய் பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை பெற்று குணமடைய வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் ரோகிணி கூறினார்.

நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் (பயிற்சி) வந்தனா கார்க், அரசு ஆஸ்பத்திரி டீன் ராஜேந்திரன், மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சத்யா, துணை இயக்குனர்கள் பூங்கொடி, வளர்மதி, காசநோய் பிரிவு துணை இயக்குனர் கணேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story