கள்ளக்காதலனிடம் இருந்து பெண்ணை பிரித்த தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கைது


கள்ளக்காதலனிடம் இருந்து பெண்ணை பிரித்த தகராறில் தொழிலாளியை அடித்துக்கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கைது
x
தினத்தந்தி 11 Aug 2018 12:15 AM GMT (Updated: 10 Aug 2018 9:20 PM GMT)

கள்ளக்காதலனிடம் இருந்து பெண்ணை பிரித்த தகராறில் ஈரோட்டில் தொழிலாளியை அடித்துக்கொன்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஈரோடு,

ஈரோடு பெரியசேமூர் கல்லாங்கரடு ஸ்ரீராம் நகரை சேர்ந்தவர் முத்து. இவருடைய மகன் செல்வகுமார் (வயது 25). விசைத்தறி தொழிலாளி. இவருடைய மனைவி லீலாவதி (22). இவர்களுக்கு சுதர்சன் (2) என்கிற ஒரு மகன் உள்ளான். அதே பகுதியில் மணியன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். செல்வகுமாருக்கு மணியன் அண்ணன் முறை ஆவார்.

கடந்த 3-ந் தேதி மணியனின் மனைவி லட்சுமி (28) வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர்கள் பல இடங்களிலும் தேடினர். அப்போது அவர் சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த ஒருவருடன் வசித்து வருவதாக செல்வகுமாருக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து செல்வகுமார் சங்ககிரிக்கு சென்று லட்சுமியை ஈரோட்டிற்கு வருமாறு அழைத்து உள்ளார். ஆனால் அவருக்கு ஈரோட்டிற்கு வர விருப்பமில்லை. ஆனால் அவரை செல்வகுமார் கட்டாயப்படுத்தி அழைத்து வந்தார். இதனால் செல்வகுமார் மீது லட்சுமிக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் வீட்டின் முன்பு லட்சுமி நின்று கொண்டு இருந்தார். அந்த வழியாக செல்வகுமார் நடந்து சென்றார். அப்போது செல்வகுமாருக்கும், லட்சுமிக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமி அருகில் கிடந்த ஒரு கட்டையை எடுத்து செல்வகுமாரை தாக்கி உள்ளார். மேலும் இந்த தகராறு பற்றி அறிந்ததும் லட்சுமியின் உறவினர்கள் அங்கு திரண்டு வந்தனர். அவர்களும் லட்சுமிக்கு ஆதரவாக செல்வகுமாரை சரமாரியாக தாக்க தொடங்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த செல்வகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் செல்வகுமார் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கள்ளக்காதலனிடம் இருந்து லட்சுமியை பிரித்து அழைத்து சென்ற தகராறில் செல்வகுமாரை 8 பேர் சேர்ந்து அடித்துக்கொலை செய்தது தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து செல்வகுமாரை கொலை செய்ததாக லட்சுமி, லட்சுமியின் அக்காள்களான ஜோதிமணி (35), பரமேஸ்வரி (32), தந்தை கண்ணையன் (74), தாய் பாப்பம்மாள் (70), அண்ணன் மூர்த்தி (30) மற்றும் உறவினர்களான அண்ணாதுரை (40), குமரேசன் (40) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

கைதானவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story