சங்கரன்கோவில் அருகே கிராம மக்கள் தர்ணா போராட்டம்


சங்கரன்கோவில் அருகே கிராம மக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 11 Aug 2018 4:44 AM GMT (Updated: 11 Aug 2018 4:44 AM GMT)

சங்கரன்கோவில் அருகே கிராம மக்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் அருகே கிராம மக்கள் நேற்று தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

தர்ணா போராட்டம்

சங்கரன்கோவில் அருகே உள்ளது ஆனையூர் கிராமம். இக்கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் அருகே கல் குவாரி இயங்கி வந்தது. அந்த கல்குவாரி 2014-ம் ஆண்டுக்கு பிறகு செயல்படாமல் இருந்து வந்துள்ளது. மேலும் குவாரி செயல்படுவதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில் கல்குவாரி மீண்டும் இயங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கிராம மக்கள் கல்குவாரியை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடத்தினர்.

பேச்சுவார்த்தை

தகவல் அறிந்ததும் சங்கரன்கோவில் தாலுகா போலீசார் மற்றும் வருவாய் துறையினர் வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

கல்குவாரி இயங்குவது சம்பந்தமாக சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தையின் மூலம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் கிராம மக்கள் தங்களது தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். காலை 9 மணியில் இருந்து 11.30 மணி வரை 2½ மணி நேரம் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story