கண்ணமங்கலம் அருகே குளத்தில் தவறி விழுந்து சிறுவன் சாவு


கண்ணமங்கலம் அருகே குளத்தில் தவறி விழுந்து சிறுவன் சாவு
x
தினத்தந்தி 24 Aug 2018 10:30 PM GMT (Updated: 24 Aug 2018 10:13 PM GMT)

கண்ணமங்கலம் அருகே குளத்தில் மீன் பிடிக்க சென்ற சிறுவன் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே உள்ள துருகம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன்கள் முருகன் (வயது 12). மகாசிவலிங்கம் (6) மற்றும் பாஸ்கரனின் உறவினர் மகன் ஆர்யா (7) ஆகிய 3 பேரும் நேற்று காலை அந்த பகுதியில் உள்ள கங்கையம்மன் கோவில் குளத்தில் மீன் பிடிக்க சென்றனர்.

அப்போது முருகன் குளத்தில் தவறி விழுந்து மூழ்கினான். இதனால் அதிர்ச்சி அடைந்த, அவருடன் சென்ற மகாசிவலிங்கம், ஆர்யா ஆகியோர் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து குளத்தில் இறங்கி தேடினர். இதையடுத்து ஆரணி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குளத்தில் இறங்கி தேடினர். நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு முருகனை பிணமாக மீட்டனர்.

கண்ணமங்கலம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கண்ணமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story