காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 24 Aug 2018 10:50 PM GMT (Updated: 24 Aug 2018 10:50 PM GMT)

பரதராமி அருகே காதல் திருமணம் செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை போலீசில் புகார் செய்தார்.

குடியாத்தம்,

குடியாத்தத்தை அடுத்த பரதராமி, ரங்கசமுத்திரம் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் நவீன்குமார் (வயது 24). பரதராமியை அடுத்த பெருமாள்பல்லியை சேர்ந்த கேசவலு என்பவரது மகள் சினேகா (21). இவர்கள் இருவரும் காதலித்து கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு பின்னர் கணவன் - மனைவி இருவரும் பெங்களூருவில் வசித்து வந்தனர். அங்கு நவீன்குமார் ஒர்க் ஷாப்பில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு 1½ வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு நவீன்குமார் மனைவியுடன் ரங்கசமுத்திரத்திற்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் வீட்டில் சினேகா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சினேகாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து சினேகாவின் தந்தை கேசவலு தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக பரதராமி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தற்கொலை செய்துகொண்ட சினேகாவிற்கு திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் வேலூர் உதவி கலெக்டர் (பொறுப்பு) ஜெயக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story