பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 துணைத் தேர்வு எழுத தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 துணைத் தேர்வு எழுத தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 26 Aug 2018 10:45 PM GMT (Updated: 26 Aug 2018 8:12 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பிளஸ்-2 துணைத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.

பெரம்பலூர்,

வருகிற செப்டம்பர், அக்டோபர் 2018-ல் நடைபெறவுள்ள பிளஸ்-2 துணைத் தேர்விற்கு ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெறாத மற்றும் தேர்விற்கு விண்ணப்பித்து நுழைவு சீட்டு பெறப்பட்டு தவிர்க்க இயலாத காரணங்களால் தேர்விற்கு வருகை புரியாத தனித்தேர்வர்கள், தோல்வியுற்ற மற்றும் வருகை புரியாத பாடங்களில் தேர்வெழுத ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே உள்ள பழைய நடைமுறை பாடத்திட்டத்தின்படி (200 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 1,200 மதிப்பெண்களுக்கு) தேர்வெழுதி தோல்வியுற்ற மேற்குறிப்பிட்ட வகை தனித்தேர்வர்களுக்கு தேர்வர்கள் செப்டம்பர், அக்டோபர் 2018 மற்றும் மார்ச் 2019 ஆகிய இரு பருவங்களில் மட்டுமே தோல்வியுற்ற மற்றும் வருகை புரியாத பாடங்களைத் தேர்வெழுத வாய்ப்பளிக்கப்படும்.

மேலும், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அல்லது அதற்கு இணையான தேர்வில் தேர்ச்சி பெற்று நேரடி தனித்தேர்வராக பிளஸ்-2 தேர்வெழுத இப்பருவம் முதல் விண்ணப்பிக்க இயலாது. தனித்தேர்வர்களான ஆண்கள் பெரம்பலுார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கும், பெண்கள் பெரம்பலுார் புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற 1-ந்தேதி மாலை 5.45 மணிக்குள் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைனில் விண்ணப்பத்தினை பதிவு செய்த பிறகு, வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டினை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி (பொறுப்பு) புகழேந்தி வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Next Story