வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது


வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கிடைக்கிறது சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது
x
தினத்தந்தி 28 Aug 2018 10:30 PM GMT (Updated: 28 Aug 2018 6:30 PM GMT)

வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் கிடைப்பதால் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வராது என சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை,

சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளாக பூண்டி, செம்பரம்பாக்கம், புழல், சோழவரம் ஏரிகள் உள்ளன.

இந்த 4 ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கனஅடி தண்ணீர் சேமித்து வைக்கலாம். ஆனால் தற்போது சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டுவிட்டது. மற்ற 3 ஏரிகளிலும் மொத்தமாக ஆயிரத்து 234 மில்லியன் கனஅடி நீர் மட்டுமே உள்ளது.

ஏரிகளில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் கடந்த ஆண்டைப் போல இப்போதும் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படலாம் என்கிற கவலையில் சென்னை மக்கள் உள்ளனர்.

ஆனால் அதே சமயம் வீராணம் ஏரி தற்போது முழு கொள்ளளவை எட்டி இருப்பதால் அந்த ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

நேற்று காலை நிலவரப்படி வீராணம் ஏரியில் 47 அடி தண்ணீர் இருந்தது (மொத்த நீர்மட்டம் 47.50 அடி). ஏரியில் இருந்து 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பப்படுகிறது.

சென்னையில் உள்ள ஏரிகளில் நீர்மட்டம் குறைந்தாலும் வீராணம் ஏரி தண்ணீரை வைத்து குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்கமுடியும் என நம்பப்படுகிறது.

இது குறித்து சென்னை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–
கடந்த ஆண்டு 4 ஏரிகளும் சேர்த்து வெறும் 262 மில்லியன் கனஅடி மட்டுமே நீர் இருந்தது. ஆனால் தற்போது ஆயிரத்து 234 மில்லியன் கனஅடி தண்ணீர் இருக்கிறது.

இதனை வைத்து அக்டோபர் மாதம் இறுதி வரை குடிநீர் தேவையை சமாளிக்க முடியும். மேலும் நெம்மேலி, மீஞ்சூரில் உள்ள கடல்நீரை சுத்திகரிக்கும் நிலையம் மற்றும் வீராணம் ஏரியில் இருந்து பெறப்படும் நீர் கைகொடுக்கும்.

அதற்கு மேலும் தேவை அதிகரித்தால் கல்குவாரி நீர் மற்றும் காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து நிலத்தடி நீரை வினியோகிக்கவும் திட்டம் உள்ளது. எனவே தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.


Next Story