நல்லம்பள்ளி அருகே பயங்கரம்: தொழிலாளி அடித்துக்கொலை மனைவி போலீசில் சரண்


நல்லம்பள்ளி அருகே பயங்கரம்: தொழிலாளி அடித்துக்கொலை மனைவி போலீசில் சரண்
x
தினத்தந்தி 3 Sep 2018 11:00 PM GMT (Updated: 3 Sep 2018 7:55 PM GMT)

நல்லம்பள்ளி அருகே தொழிலாளியை அடித்துக்கொலை செய்த மனைவி போலீசில் சரண் அடைந்தார்.

நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த அதியமான்கோட்டை இருசன்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 62). தொழிலாளி. இவருடைய மனைவி கன்னியம்மாள் (57). கணேசனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் பணத்தை மனைவியிடம் கொடுக்காமல் மது குடித்து செலவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர், மனைவியிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதுதொடர்பாக கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்தநிலையில் கணேசன் நேற்று முன்தினம் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த கணேசன் வீட்டில் இருந்த அரிவாளால் மனைவியை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த கன்னியம்மாள் சுதாரித்துக்கொண்டு அருகில் கிடந்த கட்டையால் கணவரை சரமாரியாக தாக்கினார்.

இதில் சுருண்டு விழுந்த கணேசன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். கணவர் இறந்து விட்டதை அறிந்த கன்னியம்மாள் இரவு முழுவதும் வீட்டில் இருந்து விட்டு நேற்று காலை அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு வந்து சரண் அடைந்தார். அப்போது நடந்த சம்பவம் குறித்து அவர் போலீசாரிடம் கூறினார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் கொலை செய்யப்பட்ட கணேசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்னியம்மாளை கைது செய்தனர். குடும்பத்தகராறில் மனைவி கணவரை அடித்துக்கொலை செய்த பயங்கர சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story