ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு அதிகாரிகள் தகவல்


ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 6 Sep 2018 9:30 PM GMT (Updated: 6 Sep 2018 6:12 PM GMT)

ஆந்திராவில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதால் சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் அடுத்த மாதம் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஊத்துக்கோட்டை,

சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் முக்கிய ஏரியாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கண்டலேறு அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் கிருஷ்ணா நதிநீர் பங்கீட்டு திட்டத்தின் படி 2-வது தவணையாக பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கவில்லை.

பூண்டி ஏரியில் தண்ணீர் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் 12 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி. நீர் மட்டம் வெகுவாக குறைந்ததால் பூண்டி ஏரியில் மீன்கள் செத்து மிதக்கின்றன.

போதிய நீர் இல்லாததால் பூண்டி ஏரியில் இருந்து சென்னைக்கு தண்ணீர் வழங்குவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் வந்தால் மட்டுமே சென்னைக்கு குடிநீர் வழங்குவது சாத்தியம் ஆகும். இதற்கிடையே ஆந்திர மாநிலம் ஸ்ரீ சைலம் அணை நீர் பிடிப்பு பகுதிகளில் 10 நாட்களுக்கு முன்னர் பலத்த மழை பெய்தது. இதனால் ஸ்ரீ சைலம் அணை நிரம்பி வழிகிறது. இங்கிருந்து தண்ணீரை சோமசீலா அணைக்கு திறந்து விட ஆந்திர அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பின்னர் இங்கிருந்து இந்த தண்ணீர் கண்டலேறு அணைக்கு திறந்து விட்ட பிறகு பூண்டி ஏரிக்கு திறக்கப்படும்.

ஸ்ரீ சைலம்- பூண்டி இடையே 438 கிலோமீட்டர் தூரம் ஆகும். இதில் ஸ்ரீ சைலம்- சோமசீலா இடையேயான தூரம் 111 கிலோமீட்டர். ஸ்ரீ சைலம் அணையில் உள்ள தண்ணீர் சோமசீலா அணை வழியாக கண்டலேறு அணையை அடைந்து அங்கு இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் பட்சத்தில் அடுத்த மாதம் சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் கிடைக்கும் என்று தமிழக அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.

பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாககம் ஆகிய 4 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். தற்போது 1,123 மில்லியன் கன அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 10 சதவீதம் ஆகும். தற்போது வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது. கிருஷ்ணா நதி நீரும் பூண்டி ஏரிக்கு வரும் பட்சத்தில் சென்னை நகர மக்களின் குடிநீர் தேவை முழு அளவில் பூர்த்தி செய்ய முடியும்.

Next Story