குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்


குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 10 Sep 2018 12:38 AM GMT (Updated: 10 Sep 2018 12:38 AM GMT)

திருப்பைஞ்சீலியில், ஒரு மாதத்துக்கும் மேலாக குடிநீர் வராததை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சமயபுரம்,

மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருப்பைஞ்சீலியில் வடக்கு தெரு, தெற்கு தெரு, கணேசபுரம், பாரதி நகர், அம்பேத்கர் நகர், சுபாஷ் நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு தெருக்கள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதிகளுக்கு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக தெரு குழாய்கள் மூலமும், வீட்டில் உள்ள இணைப்புகள் மூலமாகவும் 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக திருப்பைஞ்சீலி சிவன் கோவில் அருகே குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு முக்கொம்பில் கொள்ளிடம் பாலம் உடைந்ததை ஒட்டி அங்கிருந்து குழாய் மூலம் இப்பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். ஈச்சம்பட்டியில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான கிணற்றின் மூலமாகவும், திருப்பைஞ்சீலி வனத்தாயி அம்மன் கோவில் அருகே உள்ள ஆழ்குழாய் கிணறு மூலமாகவும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் சுபாஷ் நகர் பகுதி மக்களுக்கு கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்றும், குடிநீர் திறக்க ஆபரேட்டர் பணம் கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதை கண்டித்தும், உடனடியாக குடிநீர் வினியோகம் செய்யக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த மைதிலி என்பவர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலிக்குடங்களுடன் ஒன்று திரண்டு திருப்பைஞ்சீலியில் இருந்து மண்ணச்சநல்லூர் செல்லும் சாலையில் அரசமரம் அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் திருப்பைஞ்சீலியில் ஞாயிற்றுக்கிழமை தோறும் நடைபெறும் சந்தைக்கு பொருட்கள் வாங்க வந்தவர்களும் அவதிக்கு உள்ளாயினர்.

இது குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், ஊராட்சி செயலாளர் சிவலிங்கம் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உடனடியாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், புதிய ஆபரேட்டர் மூலம் தெருக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த திடீர் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story