கடைமடைக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்


கடைமடைக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 14 Sep 2018 11:30 PM GMT (Updated: 14 Sep 2018 10:54 PM GMT)

கடைமடைக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காய்ந்த நாற்றுகளுடன் வந்தவர்களை தடுத்ததால் போலீசாருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

திருச்சி,

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதை தொடர்ந்து காவிரி ஆற்றில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் திருச்சி காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கடந்த மாதம் 22-ந் தேதி முக்கொம்பு கொள்ளிடம் அணையில் 9 மதகுகள் உடைந்தன. இதனால் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறியது. முக்கொம்பு கொள்ளிடம் அணையை தற்காலிகமாக சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டி வந்தனர்.

இந்தநிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று காலை திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் அங்கு அலுவலகத்துக்குள் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் சிகாமணி மற்றும் கே.கே.நகர் போலீசார் அங்கு சென்று விவசாயிகளிடம் பேசினர். அதற்கு அய்யாக்கண்ணு, காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வந்து சேராததால் சாகுபடி செய்ய முடியவில்லை. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். இது குறித்து தலைமை பொறியாளரிடம் முறையிட வேண்டும்“ என்றார்.

சிறிதுநேரத்தில் தலைமை பொறியாளர் செந்தில்குமார், செயற்பொறியாளர் கணேசன் மற்றும் அதிகாரிகள் அங்கு வந்தனர். அவர்களிடம் விவசாயிகள் கூறுகையில், “மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டு 58 நாட்கள் ஆகிறது. ஆனால் புள்ளம்பாடி, பெருவளை, அய்யன்வாய்க்கால்களில் முழுமையான அளவு தண்ணீர் திறக்காததால் சாகுபடி செய்ய முடியவில்லை. நாற்றுகள் காய்ந்து கிடக்கிறது. ஆகவே கடைமடை வரை தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையாக தண்ணீரை திறந்து விடாமல் கடமையை செய்ய தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் காவிரி, கொள்ளிடத்தில் தடுப்பணைகள் கட்டி, தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் எங்களை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட வேண்டும்” என்று கூறினர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விவசாயிகளிடம் பேசுகையில், முக்கொம்பு கொள்ளிடம் அணையில் மதகுகள் உடைந்த இடத்தில் தீவிரமாக பணியாற்றி வருகிறோம். வருகிற 17-ந் தேதி (திங்கட்கிழமை) புள்ளம்பாடி, பெருவளை, அய்யன்வாய்க்கால்களில் தலா 400 கனஅடி தண்ணீர் தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனை ஏற்றுக்கொண்டு விவசாயிகள் அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக பொதுப்பணித்துறை அலுவலகத்துக்கு காய்ந்த நாற்றுகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். அவற்றை தடுத்து அலுவலகத்துக்குள் கொண்டு செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் போலீசாருடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து காய்ந்த நாற்றுகளை உள்ளே கொண்டு சென்றனர்.

Next Story