தாட்கோ கடன் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்


தாட்கோ கடன் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஆசியா மரியம் தகவல்
x
தினத்தந்தி 15 Sep 2018 10:36 PM GMT (Updated: 15 Sep 2018 10:36 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் தாட்கோ மூலம் கடன் பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஆசியா மரியம் தெரிவித்து உள்ளார்.

நாமக்கல்,

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- 2018-19-ம் நிதியாண்டிற்கு தாட்கோ திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ள ஆதிதிராவிடர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. எனவே நிலம் வாங்குதல், நிலம் மேம்பாடு திட்டம், துரித மின் இணைப்பு திட்டம், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல், தொழில் முனைவோர் திட்டம் ஆகிய திட்டங்களுக்கு 18 வயது முதல் 65 வயது வரை உள்ள ஆதிதிராவிடர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இதேபோல் இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவ மையம், மருந்தியல், கண் கண்ணாடியகம், மூடநீக்கும் மையம், ரத்த பரிசோதனை நிலையம் மற்றும் அதனை மேம்படுத்துதல் ஆகிய திட்டங்களுக்கு வயது வரம்பு 18 முதல் 45 வரை ஆகும்.

மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி மற்றும் பொருளாதார கடன்உதவி ஆகியவற்றிற்கு மானியத்துடன் கூடிய நிதிஉதவி வழங்கப்படும். மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குனர் விருப்புரிமை நிதி, தாட்கோ தலைவரின் விருப்புரிமை நிதி, இந்திய குடிமைப்பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதி உதவி உள்ளிட்ட திட்டங்களில் பயன்பெறும் ஆதிதிராவிடர்களிடம் இருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த திட்டங்களில் பயன்பெற விரும்புவோர் தாட்கோ இணையதள முகவரி http://application.tahdco.com மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது புகைப்படம், சாதிச்சான்று, வருமானச்சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, விலைப்புள்ளி, விண்ணப்பதாரரின் செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி, திட்ட அறிக்கை ஆகியவற்றினை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வரும் தாட்கோ அலுவலகத்தில் ரூ.60-ஐ செலுத்தி விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story