குட்கா ஊழலை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்


குட்கா ஊழலை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Sep 2018 11:30 PM GMT (Updated: 18 Sep 2018 7:13 PM GMT)

குட்கா ஊழலை கண்டித்து ஈரோட்டில் தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

ஈரோடு,

குட்கா ஊழலை கண்டித்தும், ஊழலுக்கு காரணமானவர்களை பதவி விலக கோரியும், தமிழக அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் மாநிலம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி நேற்று ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமை தாங்கினார். அவைத்தலைவர் குமார் முருகேஸ், முன்னாள் எம்.பி. கந்தசாமி, முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்பு இணை செயலாளர் வி.சி.சந்திரகுமார், மாநில நெசவாளர் அணி செயலாளர் எஸ்.எல்.டி.ப.சச்சிதானந்தம் ஆகியோர் பேசினார்கள். மாவட்ட பொருளாளர் பி.கே.பழனிச்சாமி அ.தி.மு.க. அரசின் குட்கா ஊழல் உள்பட பல்வேறு ஊழல்களை பட்டியலிட்டு கண்டன கோ‌ஷங்கள் எழுப்பினார். தொடர்ந்து குவிந்திருந்த தொண்டர்கள் கோ‌ஷம் எழுப்பினார்கள்.

ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி பேசும்போது, ‘தற்போதைய அ.தி.மு.க. தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் முதல்–அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் எந்தெந்த துறையில் எல்லாம் ஊழல் செய்ய முடியும் என்று சிந்தித்து செயல்படுகிறார்கள். விஞ்ஞானிகள் ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடிக்க பல ஆண்டுகள் கஷ்டப்படுகிறார்கள். ஆனால் தமிழக அமைச்சர்கள் எந்த துறையாக இருந்தாலும் அதில் ஊழல் செய்யும் வழிமுறைகளை ஒரு சில மணி நேரங்களிலேயே கண்டுபிடித்து ஊழல் செய்கிறார்கள். இந்த ஊழல் ஆட்சி அகல வேண்டும். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்–அமைச்சராக வர தி.மு.க. தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டும்’ என்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச்செயலாளர்கள் செல்லப்பொன்னி மனோகரன், க.சின்னையன், மாநகர செயலாளர் எம்.சுப்பிரமணியம், இளைஞர் அணி அமைப்பாளர் பிரகாஷ், தலைமை செயற்குழு உறுப்பினர் குமாரசாமி, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கோட்டை பா.ராமு, பகுதி செயலாளர் பொ.ராமு என்கிற ராமச்சந்திரன், நகர பொறுப்பாளர்கள் து.சந்திரசேகர், பி.என்.எம்.நடேசன், முன்னாள் கவுன்சிலர்கள் மதன்மோகன், பொன்பூபதி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story