காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் - சித்தராமையா


காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் - சித்தராமையா
x
தினத்தந்தி 19 Sep 2018 12:17 AM GMT (Updated: 19 Sep 2018 12:17 AM GMT)

கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் பா.ஜனதாவின் கனவு நிறைவேறாது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள் என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜார்கிகோளி சகோதரர்கள் உள்பட 15 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் முன்னாள் முதல்-மந்திரியும் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதை கவனித்து வருகிறேன். இந்த செய்திகள் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. அவை அடிப்படை ஆதாரமற்ற செய்திகள் ஆகும்.

கூட்டணி ஆட்சிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் செயல்படவில்லை. மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி என்னை நேரில் சந்தித்து பேசினார். அவர் கட்சியை விட்டு விலகுவதாக என்னிடம் கூறவில்லை. ஆனால் ஊடகங்களில் வேறு விதமாக செய்திகள் வருகின்றன. அவை உண்மை இல்லை.

எம்.எல்.ஏ.க்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து பேசிக்கொள்வதில் என்ன தவறு உள்ளது. என்னை கூட எம்.எல்.ஏ.க்கள் பலர் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்கள். இதற்கு வேறு விதமாக அர்த்தம் கற்பிப்பது சரியல்ல. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் கட்சியை விட்டு விலக மாட்டார்கள்.

ரமேஷ் ஜார்கிகோளி பல்லாரியை சேர்ந்த ஒருவருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கேட்பதில் தவறு இல்லை. எங்கள் கட்சியில் மந்திரி பதவிக்கு தகுதியானவர்கள் அதிகம் பேர் உள்ளனர். பலர் மந்திரி பதவியை வழங்குமாறு கேட்கிறார்கள். இதை தவறு என்று சொல்ல முடியாது.

மந்திரிசபையில் காங்கிரசுக்கு 6 காலி இடங்கள் இருக்கின்றன. அதை நிரப்பும் வகையில் இந்த மாதத்தின் 3-வது வாரத்தில் மந்திரிசபையை விரிவாக்கம் செய்வது என்று கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் கர்நாடக மேல்-சபையில் 6 இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தேர்தல் வருகிற 3-ந் தேதி நடைபெற உள்ளது.

அதன் காரணமாக மந்திரிசபையை விரிவாக்கம் செய்யும் முடிவை தள்ளி ைவத்துள்ளோம். அதாவது கர்நாடக மேல்-சபை தேர்தல் நடந்து முடிந்த பிறகு மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும். இந்த மேல்-சபை தேர்தல் குறித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை நாளை(அதாவது இன்று) நேரில் சந்தித்து விவாதிக்க டெல்லி ெசல்கிறேன்.

நான் வெளிநாட்டில் இருந்தபோது கர்நாடக அரசியல் நிகழ்வுகள் பற்றி கவனம் செலுத்தவில்லை. ஆட்சிக்கு ஆபத்து போன்ற செய்திகள் வெளியானதால், மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியை தொலைபேசியில் அழைத்து பேசினேன். எனது வெளிநாட்டு பயணம் சிறப்பாகவே இருந்தது.

இந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும். இந்த ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்கிறது உண்மை தான். இதைத்தான் முதல்-மந்திரியும் கூறி இருக்கிறார். பா.ஜனதாவினரின் இந்த முயற்சி வெற்றி பெறாது. பெலகாவி அரசியலில் மந்திரி டி.கே.சிவக்குமார் தலையிடுவதாக மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறி இருப்பது பற்றி எங்கள் கட்சிக்குள் பேசி விவாதித்து அதற்கு தீர்வு காண்போம். அதை பற்றி ஊடகங்களில் விவாதிக்க முடியாது. அது எங்கள் உட்கட்சி விவகாரம்.

தேவைப்பட்டால் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை கூட்டி விவாதிப்பேன். ஆபரேஷன் தாமரை மூலம் பா.ஜனதாவினர் கடந்த 2008-ம் ஆண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைத்தனர். கர்நாடக அரசியலில் முதல் முறையாக ஆபரேசன் தாமரை என்ற ஒரு திட்டத்தை தொடங்கியவர்களே பா.ஜனதாவினர் தான். அதில் அவர்களுக்கு நல்ல அனுபவம் உள்ளது.

மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியை முதல்-மந்திரி குமாரசாமி நேரில் சந்தித்து பேசியதில் தவறு ஒன்றும் இல்லை. கூட்டணி ஆட்சியில் எனது பேச்சுக்கு மதிப்பு இல்லை என்று சொல்வது தவறானது. நீங்கள் நினைப்பது போல் ஒன்றும் இல்லை.

மந்திரி டி.கே.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது பற்றிய விவரங்கள் எனக்கு தெரியாது. அதனால் அதுபற்றி கருத்து சொல்ல மாட்டேன். இந்த அரசியல் சூழ்நிலை குறித்து முதல்-மந்திரி என்னை சந்தித்து ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. நானும் அவரிடமும் இதுபற்றி விவாதிக்கவில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார். 

Next Story