திருவாரூருக்கு, மு.க.அழகிரி இன்று வருகை கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் பேசுகிறார்


திருவாரூருக்கு, மு.க.அழகிரி இன்று வருகை கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் பேசுகிறார்
x
தினத்தந்தி 22 Sep 2018 11:00 PM GMT (Updated: 22 Sep 2018 6:43 PM GMT)

திருவாரூருக்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) மு.க.அழகிரி வந்து கருணாநிதி புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

திருவாரூர்,

முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி மறைவை தொடர்ந்து திருவாரூர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காரணமாக கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் தனித்து செயல்பட்டு வருகிறார். சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி சமாதிக்கு தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலம் நடத்தி அஞ்சலி செலுத்தினார்.

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் திருக்குவளையில் உள்ள அவருடைய இல்லத்தில் செயல்படும் நூலகத்திற்கு சென்று கருணாநிதி உருவப் படத்திற்கு மாலை அணிவித்தார். அதேபோல் காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகதம்மாள் நினைவிடத்திலும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். கருணாநிதி மறைவுக்கு பிறகு 2 முறை திருவாரூருக்கு மு.க.ஸ்டாலின் வந்துள்ளது கட்சியினர் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தியது.

தி.மு.க. சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள திருமண மண்டபத்தில் புகழ் அஞ்சலி கூட்டம் நேற்றுமுன்தினம் நடத்தப்பட்டது. இந்த நிலையில் மு.க.அழகிரி இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருவாரூர் வருகிறார். முன்னதாக காட்டூரில் உள்ள பாட்டி அஞ்சுகத்தம்மாள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி, அங்கு கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கிறார். அதனை தொடர்ந்து திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள ஏ.கே.எம். திருமண அரங்கில் புகழ் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.

திருவாரூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் யார் என்ற எதிர்ப்பார்ப்பு தொகுதி மக்கள் மட்டுமின்றி தி.மு.க. உள்பட அனைத்து கட்சியினருக்கு இருந்து வருகிறது. தி.மு.க. தலைமை யாரை அறிவித்தாலும் மகத்தான வெற்றி பெற பாடுவோம் என கட்சியினர் தயாராக இருந்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் திருவாரூரில் கருணாநிதியின் புகழ் அஞ்சலி கூட்டத்தில் மு.க.அழகிரி கலந்து கொள்வது பெரும் சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

Next Story