சாலையில் பள்ளங்களை சீர் செய்யும்போது வீடுகளில் விரிசல்; பொதுமக்கள் அச்சம்


சாலையில் பள்ளங்களை சீர் செய்யும்போது வீடுகளில் விரிசல்; பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 26 Sep 2018 11:00 PM GMT (Updated: 26 Sep 2018 8:04 PM GMT)

கரூரில் சாலையில் ஏற்பட்ட பள்ளங்களை சீர் செய்யும் பணியின் போது, அங்குள்ள சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

கரூர்,

கரூர் சர்ச்கார்னர்-ஐந்து ரோட்டிற்கு இடைப்பட்ட அண்ணா வளைவு பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலையில் திடீரென அடுத்தடுத்து 2 பள்ளங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டு மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையே நகராட்சி நிர்வாகத்தினர் அந்த சாலையை ஆய்வு செய்த போது, அங்கு பாதாள சாக்கடை குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக சாலை பகுதி உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அதனை சீரமைக்கும் நடவடிக்கையில் கரூர் நகராட்சி ஆணையர் செந்தில்முருகன் மேற்பார்வையில் பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் ஒரு பள்ளத்தில் மண்ணை கொட்டி நிரப்பி மூடி விட்டனர். அந்த பகுதி மேலும் உள்வாங்க வாய்ப்பிருக்கிறதா? என்பது குறித்து தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

அண்ணா வளைவு அருகே ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தினை சீர் செய்யும் பொருட்டு அங்கு சுமார் 20 அடிக்கும் மேலாக பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அங்கு ஏற்கனவே இருந்த பழைய பாதாள சாக்கடை குழாய்கள் அகற்றப்பட்டு விட்டன. தற்போது புதிய சிமெண்டு குழாய்கள் அங்கு தயார் நிலையில் இருக்கின்றன. அங்கு பொக்லைன் மூலம் மண் அள்ளப்பட்டு சீரமைக்கும் பணி நடக்கிறது.

குழாய் பதிப்பதற்காக ஆழமாக தோண்டப்படுவதால் மண் சரிந்து விடக்கூடாது என்பதற்காக அங்கு இரும்பு பட்டைகளை கொண்டு தடுப்புகள் அமைத்து, சவுக்கு மரகட்டைகளால் முட்டு கொடுக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பணிகளால் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு நீர் ஏதும் வெளியேறி குழிக்குள் பாய்கிறதா? என்பதையும் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

சாலையில் ஏற்பட்ட பள்ளத்தினை சீரமைக்கும் பணியால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் உள்ளிட்டோர் தங்களது கார் உள்ளிட்ட வாகனங்களை வீடுகளுக்கு கொண்டுவர முடியாத சூழல் உள்ளது. எனவே இந்த சாலை பள்ளத்தை சீரமைக்கும் பணியை விரைந்து முடித்து புதிதாக தார் சாலை அமைத்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதுஒரு புறம் இருக்க அண்ணா வளைவு அருகே சாலையில் அதிக ஆழத்தில் பள்ளம் தோண்டப்படுவதால், அதனையொட்டிய வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் அவர்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் மண்சரிவு உள்ளிட்டவை ஏற்பட்டு அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்னதாக வெகுவிரைவில் பணியை முடிக்க வேண்டும். மேலும் நகராட்சி நிர்வாகத்தினர் விரிசல் அடைந்த வீடுகள், கடைகளை ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story