திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு


திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர் விடுதியில் கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 11 Oct 2018 11:47 PM GMT (Updated: 11 Oct 2018 11:47 PM GMT)

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியின் முதன்மை மாணவர் விடுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் திருவண்ணாமலை வரலாற்று ஆய்வு நடுவம் மூலம் திருமலை, சீயமங்கலம், கூழமந்தல், தூசி, மாமண்டூர் ஆகிய வரலாற்று பகுதிகளுக்கு ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா சென்றனர். இந்த சுற்றுலா பஸ்சை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் கல்லூரி வளாகத்தை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரியின் முதன்மை மாணவர் விடுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாணவர்களுக்கு தயார் செய்யப்பட்டு வழங்கும் உணவுகள் தரமானதாக உள்ளதா? என்று சாப்பிட்டு பார்த்தார். சமையல் அறையும், விடுதி வளாகத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

அதைத் தொடர்ந்து மாணவர்கள் தங்கும் அறையையும் பார்வையிட்டார். மேலும் அங்கு தங்கி உள்ள மாணவர்களிடம் விடுதியில் போதிய வசதிகள் உள்ளதா? என்று கேட்டறிந்தார்.

ஆய்வின்போது உதவி கலெக்டர் (பயிற்சி) பிரதாப் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், விடுதி அலுவலர்கள் உடனிருந்தனர்.


Next Story