மயக்க மருந்து கொடுப்பது மட்டுமல்லாமல் ஆபத்தான நிலையில் இருப்பவர்களை காப்பாற்றுவதும் மயக்க டாக்டர்களின் பணி


மயக்க மருந்து கொடுப்பது மட்டுமல்லாமல் ஆபத்தான நிலையில் இருப்பவர்களை காப்பாற்றுவதும் மயக்க டாக்டர்களின் பணி
x
தினத்தந்தி 16 Oct 2018 10:45 PM GMT (Updated: 16 Oct 2018 7:20 PM GMT)

மயக்க மருந்து கொடுப்பது மட்டுமல்லாமல் ஆபத்தான நிலையில் இருப்பவர்களை காப்பாற்றுவதும் மயக்க டாக்டர்களின் பணி என்று மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உலக மயக்கவியல் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது. பின்னர் சிரமமான சுவாசப்பதை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. மயக்கவியல் துறை பேராசிரியர் டாக்டர் குமரன் வரவேற்றார்.

இதில் தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

பல நூற்றாண்டுகளாக அறுவை சிகிச்சை நடந்து வந்தாலும் முதன்முதலாக 1846-ம் ஆண்டு அக்டோபர் 16-ந்தேதி ஒரு அறுவை சிகிச்சை எந்தவித வலியுமின்றி தற்காலிகமாக சுயநினைவையும் அனைத்து உணர்வுகளையும் நிறுத்தி வைத்து வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதுவே மயக்கவியல் பிறந்த வரலாறு.

இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 16-ந்தேதி உலக மயக்கவியல் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் பின்னர் இன்றுவரை அறுவை சிகிச்சைகளில் மயக்கவியல் என்பது பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்து உள்ளது. மயக்க டாக்டர்களின் பணி என்பது மயக்க மருந்து கொடுப்பது மட்டுமல்ல. ஆபத்தான நிலையில் இருப்பவர்களை காப்பாற்றுவதும் அவர்களின் பணி தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கை மயக்கவியல்துறை பேராசிரியர் சாந்திபால்ராஜ் நடத்தினார். இதில் டாக்டர்கள் ரவிக்குமார், பாரதி மற்றும் மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள், ராசாமிராசுதார் மருத்துவமனை டாக்டர்கள், முதுகலை மருத்துவ மாணவர்கள், பயிற்சி டாக்டர்கள், இளங்கலை மருத்துவ மாணவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை மயக்கவியல் துறை பதிவாளர் டாக்டர் உதயணன் தொகுத்து வழங்கினார். முடிவில் மயக்கவியல்துறை இணை பேராசிரியை டாக்டர் ஜெயராணி நன்றி கூறினார்.

Next Story