சேலம்: காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பட்டதாரி பெண் போலீசில் தஞ்சம்


சேலம்: காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி பட்டதாரி பெண் போலீசில் தஞ்சம்
x
தினத்தந்தி 16 Oct 2018 11:00 PM GMT (Updated: 16 Oct 2018 8:54 PM GMT)

கணவர் கட்டிய தாலியை கழற்றி விட்டு வந்த பட்டதாரி பெண் தன்னை காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீசில் தஞ்சம் அடைந்தார்.

சேலம்,

கணவர் கட்டிய தாலியை கழற்றி விட்டு வந்த பட்டதாரி பெண் தன்னை காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி போலீசில் தஞ்சம் அடைந்தார். மேலும் தனக்கு பெற்றோர் கட்டாய திருமணம் செய்து வைத்ததாக புகார் கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தாராபுரம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவருடைய மகள் ரம்யா (வயது 21). பி.ஏ. பட்டம் பெற்றுள்ளார். இவர் நேற்று சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள சேலம் சரக டி.ஐ.ஜி. அலுவலகத்தில், தனது காதலன் சிவகுமார் என்பவருடன் தஞ்சம் அடைந்தார். பின்னர் அங்குள்ள போலீசாரிடம் தன்னை காதலனுடன் சேர்த்து வைக்க கோரியும், பாதுகாப்பு வழங்க கோரியும் மனு ஒன்றை கொடுத்தார். இதைத்தொடர்ந்து ரம்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

எடப்பாடி மோட்டூர் காட்டுவளவு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் சிவகுமார் (20). இவர் அரியானூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் என்னுடைய உறவினர் வீட்டுக்கு அவ்வப்போது வந்து செல்வார். அப்போது சிவகுமாருக்கும், எனக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் எங்களுக்குள் காதலாக மாறியது. நாங்கள் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வருகிறோம். இந்த காதல் என்னுடைய பெற்றோருக்கு தெரியவந்தது. இதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் என்னை தாக்கினர்.

ஆனாலும் நான் சிவகுமார் உடனான காதலை தொடர்ந்து வந்தேன். இதையறிந்த என்னுடைய பெற்றோர் எனக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர். இதனால் நான் 2 முறை தற்கொலைக்கு முயன்றேன். என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து காப்பாற்றி விட்டனர். இதனிடையே எனக்கும், உறவினர் ஒருவரின் மகனுக்கும் திருமண செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனால் எப்படியாவது வீட்டை விட்டு வெளியேறி, சிவகுமாரை திருமணம் செய்து விடலாம் என நினைத்தேன்.

இதை தடுக்கும் வகையில் நான் வீட்டை விட்டு வெளியே செல்லாத வகையில் எனது குடும்பத்தினர் பார்த்துக்கொண்டனர். இதனால் என்ன செய்வது என தெரியாமல் திணறினேன். பின்னர் திருமணம் நடந்தாலும் சிவகுமாரை கரம் பிடித்து விட வேண்டும் என முடிவெடுத்தேன். கடந்த மாதம் 12-ந் தேதி எனக்கும், உறவினரின் மகனுக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தால் கடுமையான மனநெருக்கடியில் கணவர் வீட்டில் நாட்களை நகர்த்தி வந்தேன். வீட்டை விட்டு வெளியேற தக்க சமயத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். நேற்று முன்தினம் இரவு வீட்டில் கணவர், மாமனார், மாமியார் என அனைவரும் தூங்கியவுடன், நான், யாருக்கும் தெரியாமல் கணவர் கட்டிய தாலியை கழற்றி அங்கேயே வைத்து விட்டு, வீட்டில் இருந்து வெளியேறினேன். இதையடுத்து தான் டி.ஐ.ஜி. அலுவலகத்திற்கு காதலன் சிவகுமாருடன் சேர்த்து வைக்கக்கோரி மனு கொடுக்க வந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மனு கொடுக்க வந்த போது ரம்யாவுடன், சிவகுமாரின் தந்தை மற்றும் உறவினர்கள் ஆகியோர் உடன் வந்திருந்தனர். இந்த மனு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story