எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாளை. சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 23 பேர் விடுதலை


எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாளை. சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 23 பேர் விடுதலை
x
தினத்தந்தி 17 Oct 2018 9:30 PM GMT (Updated: 17 Oct 2018 2:31 PM GMT)

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 23 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

நெல்லை, 

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்து ஆயுள் தண்டனை கைதிகள் 23 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 10 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள மத்திய சிறைகளில் ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள்.

நன்னடத்தையின் அடிப்படையில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர். பாளையங்கோட்டை மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என சுமார் 1,300–க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.

23 கைதிகள் விடுதலை

இதுவரை 6 முறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். நேற்று 7–வது முறையாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து 23 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களின் வருகைக்காக உறவினர்கள் காத்து இருந்தனர். சிலர் குடும்பத்துடன் வந்து உட்கார்ந்து இருந்தனர்.

அவர்கள் சிறை வாசலுக்கு வந்தவுடன், உறவினர்கள் கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர். பின்னர் அவர்கள் பஸ்களில் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். சில கைதிகளை அழைத்து செல்ல உறவினர்கள் யாரும் வரவில்லை. அவர்கள் தனியாக தங்களது உடைமைகளுடன் சொந்த ஊருக்கு சென்றனர்.

இதுவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து 180 கைதிகள் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story