லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
x
தினத்தந்தி 26 Oct 2018 10:00 PM GMT (Updated: 26 Oct 2018 8:34 PM GMT)

புதுவையில் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுவையில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்ய அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் ஒதியஞ்சாலை காவல்நிலை பகுதிக்குட்பட்ட இடங்களில் 3 நம்பர் லாட்டரி விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு மாறன் உத்தரவின்பேரில் ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் கீர்த்தி, நாராயணசாமி மற்றும் போலீசாரை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் லாட்டரி சீட்டு விற்கப்படுகிறதா? என கண்காணித்து வந்தனர். பல இடங்களில் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். சின்னசுப்புராயப்பிள்ளை வீதி மாரியம்மன்கோவில் அருகே போலீசார் ரோந்து வந்தபோது அங்கு சந்தேகத்திற்கிடமாக திரிந்த 3 நபர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் ரெட்டியார்பாளையம் சுதாகர் நகரை சேர்ந்த அய்யப்பன் (35), புதுவை ராமராஜன் வீதியை சேர்ந்த புரூஸ் ஆண்டனி (32), வாணரப்பேட்டை ஏழைபிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்த பார்த்திபன் (32) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் செல்போனில் வாட்ஸ் அப் மூலம் 3 நம்பர் லாட்டரி சீட்டு என வாடிக்கையாளர்களுக்கு நம்பர்களை எழுதி அனுப்பி பணம் பெறுவது தெரியவந்தது. இவ்வாறு 3 நம்பர் லாட்டரி சீட்டு விற்றதில் ரூ.33 ஆயிரம் பணம் வைத்து இருந்தனர்.

 இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள்கள், கையால் எழுதிய 3 நம்பர் லாட்டரி சீட்டுகள், ரொக்கப்பணம் ரூ.33 ஆயிரம் மற்றும் செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

Next Story