காவிரி ஆற்றில் சாயக்கழிவு கலப்பா? தண்ணீர் நிறம் மாறி வருவதால் விவசாயிகள் அச்சம்


காவிரி ஆற்றில் சாயக்கழிவு கலப்பா? தண்ணீர் நிறம் மாறி வருவதால் விவசாயிகள் அச்சம்
x
தினத்தந்தி 26 Oct 2018 11:50 PM GMT (Updated: 26 Oct 2018 11:50 PM GMT)

காவிரி ஆற்றில் தண்ணீர் நிறம் மாறிவருவதால் சாயக்கழிவு கலந்துள்ளதா? என விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

ஜீயபுரம்,

திருச்சி மாவட்ட விவசாயிகளின் உயிர்நாடியாகவும், மாவட்ட மக்களின் புண்ணிய நதியாகவும் விளங்குவது காவிரி ஆறு. இந்த காவிரி ஆறு கர்நாடக மாநிலம் குடகு மலையில் இருந்து சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டம் கல்லணை வழியாக சென்று இறுதியில் கடலில் கலக்கிறது.

புண்ணிய நதியாக விளங்கும் காவிரி ஆறு தன்னுடைய கிளையாக திருச்சி மாவட்டத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக பெட்டவாய்த்தலை பகுதியில் உய்யகொண்டான் வாய்க்கால் பிரிகிறது. இதன் மூலமாகவும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

மேலும் தமிழகத்தின் நெற்களஞ்சியம் எனப்படும் தஞ்சை வரை உள்ள பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்கள் காவிரி ஆற்றின் மூலம் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமின்றி காவிரி ஆற்றில் பல இடங்களில் ஆழ்குழாய் அமைத்து திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தென் மாவட்ட மக்களுக்கும் காவிரி கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இப்படி பெருமையும், புகழும் வாய்ந்த காவிரி ஆற்றில் உள்ளூர் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். தற்போது, திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து காவிரி ஆற்றிலும், கொள்ளிடத்திலும் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அப்படி வெளியேறும் தண்ணீர் கரும்பச்சை கலரில் வெளியேறுகிறது. இதனால் அதில் சாயக்கழிவு கலந்துள்ளதா? என பொதுமக்கள், விவசாயிகள் அச்சமடைகின்றனர். மேலும் அதில் இறங்கி குளித்தால் உடல்நல பாதிப்பு ஏற்படும் என அச்சப்படுகின்றனர்.

இது பற்றி மீனவர்கள், விவசாயிகள் சிலர் கூறுகையில், காவிரியில் வரக்கூடிய தண்ணீர் கரும்பச்சை நிறத்தில் வருகிறது. ஆற்றில் இறங்கி மீன் பிடிக்கும் போது, உடலில் அரிப்பு ஏற்பட்டு மார்பு பகுதியில் சிறு சிறு கட்டிகள் ஏற்பட்டுள்ளது. மேலும் கண்களில் எரிச்சல் ஏற்படுகிறது. இந்த தண்ணீரை விவசாய நிலங்களில் பாய்ச்சினால் நிலங்களும், பயிர்களும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story