பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் மறைவுக்கு இரங்கல் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது


பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் துணை மேயர் மறைவுக்கு இரங்கல் சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது
x
தினத்தந்தி 29 Oct 2018 11:30 PM GMT (Updated: 29 Oct 2018 7:27 PM GMT)

துணை மேயர் மறைவுக்கு பெங்களூரு மாநகராட்சி கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி மேயராக கங்காம்பிகே மற்றும் துணை மேயராக ரமீளா ஆகியோர் கடந்த மாதம் (செப்டம்பர்) தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் பதவி ஏற்ற ஒரு வாரத்தில் துணை மேயர் ரமீளா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பெங்களூரு மாநகராட்சியின் முதல் கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் கங்காம்பிகே தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்பட கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் ஆளுங்கட்சி தலைவர் சிவராஜூ, மரணம் அடைந்த துணை மேயர் ரமீளாவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார். அவர் பேசுகையில், “துணை மேயராக இருந்த ரமீளா, இறந்த நாளுக்கு முந்தைய நாள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பெங்களூருவின் வளர்ச்சிக்கு அவர் பல்வேறு கனவுகளை மனதில் வைத்திருந்தார். 44 வயதே ஆன அவருக்கு இவ்வளவு வேகமாக சாவு வந்திருக்கக்கூடாது. அந்த இறைவனுக்கும் கருணை இல்லை என்று சொல்ல தோன்றுகிறது. துணை மேயர் பதவி கிடைத்தாலும், அதிகாரத்தை அனுபவிக்கும் பாக்கியம் அவருக்கு கிடைக்கவில்லை“ என்றார்.

பின்னர் மேயர் கங்காம்பிகே பேசுகையில், “நாம் இருவரும் பெண்கள். நாம் ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த ஒரு ஆண்டில் பல்வேறு வளர்ச்சி பணிகளை அமல்படுத்த வேண்டும். நகரை வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என்று அவர் அடிக்கடி என்னிடம் கூறினார். துணை மேயர் மறைவு எனக்கு அதிக துக்கத்தை ஏற்படுத்திவிட்டது. அவருக்கு உடலில் பிரச்சினை உள்ளது என்பது அவரது முகத்தில் தெரியவே இல்லை. நிர்வாகத்தில் மிகவும் ஆர்வமாக பங்கேற்றார். அவரை இறைவன் ஏமாற்றிவிட்டார். ரமீளாவின் ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டுகிறேன். மேயர் பதவியில் இருப்பவர்களுக்கு எப்போதும் நெருக்கடி இருக்கிறது. சில நேரங்களில் சரியான நேரத்திற்கு சாப்பிட முடிவது இல்லை“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேசிய ஜனதா தளம்(எஸ்) குழு தலைவர் நேத்ரா நாராயணா, “துணை மேயர் ரமீளா மரண செய்தி கேட்டு எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போது இதை நம்ப முடியவில்லை. எங்கள் கட்சி கவுன்சிலர்களுக்கு அவர் ஒரு வழிகாட்டியாக திகழ்ந்தார். அவரது ஆன்மா அமைதி பெற இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்“ என்றார்.

மேலும் முன்னாள் மேயர்கள், கவுன்சிலர்கள் பலர் பேசினர். பெங்களூருவில் ஏதாவது ஒரு ரோட்டிற்கு ரமீளாவின் பெயர் சூட்ட வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி பேசினர். அதன் பிறகு கவுன்சிலர்கள் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர். கூட்டத்தில் இரங்கல் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கூட்ட அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ரமீளாவின் உருவ படத்திற்கு மேயர் மற்றும் கவுன்சிலர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

கவுன்சிலர்களுக்கு, இந்திரா கேண்டீன் உணவு

மாநகராட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட கவுன்சிலர்களுக்கு நேற்று இந்திரா கேண்டீன் உணவு பரிமாறப்பட்டது. இதில் மேயர் கங்காபிகே, கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் உள்ளிட்டோர் உணவு சாப்பிட்ட காட்சி.
மாநகராட்சி கூட்டம் நடைபெறும் நாட்களில் கவுன்சிலர் களுக்கு மதிய உணவு ஏற்பாடு செய்யப்படுவது வழக்கம். இதில் பல்வேறு வகையான அறுசுவை உணவு வகைகள் இடம் பெறும். தனியார் உணவகத்தில் இருந்து இந்த உணவுகள் தயார் செய்யப்படும். இந்த நிலையில் நேற்று கூட்டம் முடிவடைந்ததும், கவுன்சிலர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. ஏற்கனவே முடிவு எடுத்தப்படி இந்த முறை இந்திரா கேண்டீனில் தயார் செய்யப்பட்ட உணவு வகைகள் பரிமாறப்பட்டன. மேலும் மேயர் கங்காம்பிகே, கமிஷனர் மஞ்சுநாத் பிரசாத் ஆகியோர் இந்த உணவை ருசித்து சாப்பிட்டனர். ஆனால் பெரும்பாலான கவுன்சிலர்கள், இந்திரா கேண்டீன் உணவை சாப்பிட ஆர்வம் காட்டவில்லை.

Next Story