தனித்தனி விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் சாவு


தனித்தனி விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 31 Oct 2018 9:30 PM GMT (Updated: 31 Oct 2018 6:04 PM GMT)

திருக்கோவிலூர் அருகே நடந்த தனித்தனி விபத்தில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் அருகே உள்ள சித்தலிங்கமடம் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(வயது 60), விவசாயி. சம்பவத்தன்று இவர் சொந்த வேலை காரணமாக ஒரு மோட்டார் சைக்கிளில் திருக்கோவிலூர் தாலுகா அலுவலகத்துக்கு புறப்பட்டார். திருக்கோவிலூர் ஏரிக்கரை மூளை அருகே சென்றபோது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று, பன்னீர்செல்வம் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அவரது தங்கை பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின்பேரில் திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்கோவிலூரை அடுத்த செட்டித்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் கேசவன் (60). சம்பவத்தன்று இவர் தனது மனைவி சீதாவுடன்(55) அதேஊரில் உள்ள திருக்கோவிலூர்-கள்ளக்குறிச்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் கேசவன், சீதா ஆகியோர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த கணவன்-மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர்கள் 2 பேரும் மேல்சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக இறந்தார். சீதாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். மேலும் இந்த விபத்து குறித்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story