மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இன்று முதல் கூடுதலாக 10 மின்சார ரெயில் சேவை


மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இன்று முதல் கூடுதலாக 10 மின்சார ரெயில் சேவை
x
தினத்தந்தி 31 Oct 2018 9:48 PM GMT (Updated: 31 Oct 2018 9:48 PM GMT)

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் இன்று முதல் கூடுதலாக 10 மின்சார ரெயில் சேவை இயக்கப்படுகிறது.

மும்பை,

மும்பையில் மத்திய மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடங்களில் இயக்கப்படும் மின்சார ரெயில் சேவைகள் மக்களின் போக்குவரத்துக்கு இதயதுடிப்பாக உள்ளன. தினசரி சுமார் 80 லட்சம் பயணிகள் மின்சார ரெயில் சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். காலை மற்றும் மாலை ஆகிய பிரதான நேரங்களில் கால்வைக்க முடியாத அளவுக்கு கூட்ட நெரிசல் இருந்து வருகிறது.

மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் சர்ச்கேட் முதல் தகானு வரையிலும் மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி இந்த வழித்தடத்தில் 1,355 சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மின்சார ரெயில்களில் பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு மேற்கு ரெயில்வே கூடுதலாக 10 மின்சார ரெயில் சேவைகளை அறிமுகம் செய்ய முடிவு செய்தது. இந்த புதிய சேவைகள் இன்று (வியாழக்கிழமை) முதல் இயக்கப்படுகின்றன.

இதேபோல 122 மின்சார ரெயில் சேவைகள் பல்வேறு இடங்களுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. ஏ.சி. மின்சார ரெயில் தற்போது நின்று செல்லும் வழக்கமான ரெயில் நிலையங்களுடன் சேர்த்து இன்று முதல் மெரின்லைன், சர்னிரோடு, கிராண்ட் ரோடு, தகிசர், மிராரோடு, நய்காவ், நாலச்சோப்ரா ஆகிய இடங்களிலும் நின்று செல்லும் என மேற்கு ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story