‘மீ டூ’-வில் கருத்து தெரிவிப்பது அவப்பெயரை ஏற்படுத்தும் - மந்திரி ஜெயமாலா


‘மீ டூ’-வில் கருத்து தெரிவிப்பது அவப்பெயரை ஏற்படுத்தும் - மந்திரி ஜெயமாலா
x
தினத்தந்தி 4 Nov 2018 10:18 PM GMT (Updated: 4 Nov 2018 10:18 PM GMT)

‘மீ டூ’-வில் கருத்து தெரிவிப்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் என்று மந்திரி ஜெயமாலா கருத்து தெரிவித்து உள்ளார்.

ஹாசன்,

தீபாவளி பண்டிகையையொட்டி ஹாசன் டவுனில் உள்ள ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று ஹாசனாம்பா கோவிலில் கர்நாடக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை, கன்னட கலாசார மந்திரியும், நடிகையுமான ஜெயமாலா சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திப்பு ஜெயந்தி விழாவை கொண்டாட ஆண்டுதோறும் பா.ஜனதாவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது வழக்கமான ஒன்று தான். அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்பதற்காக திப்பு ஜெயந்தி விழா கொண்டாடுவது நிறுத்தப்படாது. வருகிற 10-ந் தேதி திப்பு ஜெயந்தி விழா அரசு சார்பில் கொண்டாடப்படும்.

தற்போது பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து ‘மீ டூ‘-வில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இது ஆண்களுக்கு மட்டும் அல்ல, பெண்களுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தும். இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் பேசி தீர்த்து கொள்ள வேண்டும் என்று அவர் கூறினார்.

இதன்பின்னர் சரவணபெலகோலாவுக்கு சென்ற மந்திரி ஜெயமாலா அங்கு ஸ்ரீசவுண்டராயா மண்டபத்தில் நடந்த கோமதேஸ்வரர் கோவிலின் மடாதிபதி சாருகீர்த்தி பட்டாரக்க சுவாமிக்கு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். இதில் கர்நாடக பொதுப்பணித்துறை மந்திரி எச்.டி.ரேவண்ணா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story