உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறப்பு


உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறப்பு
x
தினத்தந்தி 7 Nov 2018 10:45 PM GMT (Updated: 7 Nov 2018 9:01 PM GMT)

உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. விவசாயிகளின் கனவு நிறைவேறும் என எம்.எல்.ஏ. நீதிபதி உறுதி கூறினார்.

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் 58 கிராம கால்வாயில் கடந்த மாதம் சோதனை ஓட்டத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. கால்வாய் உடைப்பு ஏற்பட்டதாலும், கால்வாய் மேடு பள்ளமாக இருந்ததாலும் பாதியிலேயே தண்ணீர் நிறுத்தப்பட்டது.

அதன் பின்னர் உடைப்புகள் மற்றும் கரைகள் சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. கரைகள் முழுவதும் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து நேற்று சோதனை ஓட்டத்தின் தொடர்ச்சியாக பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சிவபிரபாகர், உதவி பொறியாளர் குபேந்திரன் ஆகியோர் முன்னிலையில் வைகை அணையில் இருந்து 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.

58 கிராம கால்வாயில் தண்ணீர் திறக்கப்பட்டதை தொடர்ந்து நீதிபதி எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறுகையில், உசிலம்பட்டி பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு 58 கிராம கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.

இப்பகுதி விவசாயிகளின் கனவுத் திட்டமான 58 கிராம கால்வாய் திட்டம் முற்றிலும் நிறைவேறும். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது என்று கூறினார்.

எம்.எல்.ஏ. நீதிபதி தலைமையில் நகர செயலாளர் பூமாராஜா, மாவட்ட மீனவரணி செயலாளர் போத்திராஜா, முன்னாள் யூனியன் தலைவர் பவளக்கொடி ராசுக்காளை, செல்லம்பட்டி ஒன்றிய எம்.ஜி.ஆர் அணி பரமன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பண்பாளன், நகர் பேரவை செயலாளர் வழக்கறிஞர் லெட்சுமணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் உக்கிரபாண்டி, ஒன்றிய பேரவை மணிவண்ணன் மற்றும் விவசாயிகள் கால்வாய்க்கு திறக்கப்பட்ட தண்ணீரை மலர் தூவி வரவேற்றனர்.

Next Story