ஐ.எஸ்.ஐ. முத்திரையில்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு கலெக்டர் உத்தரவு


ஐ.எஸ்.ஐ. முத்திரையில்லாத தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் சுகாதார மேற்பார்வையாளர்களுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 10 Nov 2018 11:00 PM GMT (Updated: 10 Nov 2018 3:58 PM GMT)

ஐ.எஸ்.ஐ. தரச்சான்று முத்திரை இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகளை சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டு பறிமுதல் செய்ய கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டு உள்ளார்.

திருவண்ணாமலை
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் திருவண்ணாமலை நகருக்கு வந்த வண்ணம் உள்ளனர். திருவிழாவிற்கு வரும் பக்தர்கள் பொது இடங்களை கழிப்பிடங்களாக பயன்படுத்தாமல் நகராட்சியால் ஏற்படுத்தப்பட்டு உள்ள கழிப்பிடங்களை பயன்படுத்த வேண்டும்.

நகராட்சியால் வழங்கப்படும் பாதுகாக்கப்பட்ட குடிநீரையே பருக வேண்டும். ஈக்கள் மொய்க்கும் பண்டங்கள் மற்றும் திறந்த நிலையில் வைத்திருக்கும் தின்பண்டங்களை வாங்கி உண்ண வேண்டாம். ஐ.எஸ்.ஐ. தரச்சான்று முத்திரை இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகளை வாங்கி பருக வேண்டாம். நகரில் அன்னதானம் வழங்கும் இடங்களில் வினியோகிக்கும் உணவுப் பொருட்களை வாங்கி சாப்பிட்ட பின் இலை, ‘பேப்பர் பிளேட்டு’கள் மற்றும் காகித டம்ளர்களை தெருவில் வீசி எறியக் கூடாது.

அவற்றை ஆங்காங்கே வைக்கப்பட்டு உள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் அன்னதானம் முடிந்த பின்னர் அந்த இடங்களை ஈக்கள் மொய்க்காதவாறு சுத்தம் செய்யவும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

நகரில் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆய்வு மேற்கொண்டு ஐ.எஸ்.ஐ. தரச்சான்று முத்திரை இல்லாத தண்ணீர் பாக்கெட்டுகளையும், ஈக்கள் மொய்க்கும் பண்டங்களையும் பொது மக்கள் நலன் கருதி பறிமுதல் செய்யவும், அப்புறப்படுத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

உணவு விடுதிகள் மற்றும் தேநீர் கடைகளில் கலப்படமில்லாத பொருட்களையே பயன்படுத்த வேண்டும். இதனை சுகாதார ஆய்வாளர்கள் சோதனை மேற்கொள்ள உள்ளனர். கலப்பட பொருட்களை பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். புகையிலை பொருட்களான பீடி, சிகரெட் போன்றவை விற்பவர் மற்றும் பயன்படுத்துவோருக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story