இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி


இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
x
தினத்தந்தி 10 Nov 2018 9:30 PM GMT (Updated: 10 Nov 2018 6:28 PM GMT)

இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

தூத்துக்குடி, 

இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

ஆர்.பி.உதயகுமார் பேட்டி

தூத்துக்குடியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள், செல்லக்கூடாத வழியில் சென்று தகுதி இழந்து நிற்கிறார்கள். அவர்களிடம் தேர்தலை சந்திப்பது மற்றும் மேல் முறையீடு செய்வது என்பதில் குழப்பம் உள்ளது. அவர்கள் முதலில் மேல்முறையீடு என்று அறிவித்தார்கள். பின்னர் தேர்தலை சந்திக்கிறோம் என்று அறிவித்து உள்ளனர். நாளை என்ன அறிவிப்பார்கள் என்று தெரியாது.

தமிழக முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் அனைத்து தொகுதி பொறுப்பாளர்களையும் அழைத்து, தேர்தல் பணியாற்ற வியூகம் வகுத்து கொடுத்துள்ளார்கள். அதனை செயல்படுத்தும் பணியில் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம்.

20 தொகுதிகளிலும் வெற்றி பெறும்

இடைத்தேர்தல் நடைபெற உள்ள 20 தொகுதிகளில் எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் வர வாய்ப்பு உள்ளதாக தி.மு.க. சார்பில் சொல்லப்பட்டு வருகிறது. அது அவர்களின் தொண்டர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக காலம் காலமாக இதுபோன்று சொல்லி வருகிறார்கள். இந்த அரசு 5 ஆண்டுகளையும் வெற்றிகரமாக நிறைவேற்றி, அடுத்து வரும் தேர்தலிலும் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை முன்நிறுத்தி வெற்றி பெறுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story