மணல் கடத்தல்; 3 பேர் கைது


மணல் கடத்தல்; 3 பேர் கைது
x
தினத்தந்தி 10 Nov 2018 10:30 PM GMT (Updated: 10 Nov 2018 8:14 PM GMT)

மணல் கடத்தல் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில், மோட்டார் சைக்கிள்களில் மணல் கடத்தப்படுவதாக பெரிய காஞ்சீபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துளசி அங்கு விரைந்து சென்றார். அப்போது மணல் கடத்தியது தெரியவந்தது.

இதையொட்டி, பிள்ளையார்பாளையம் பகுதியை சேர்ந்த முருகன் (வயது 34) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.கே.பேட்டை பகுதியில் சிலர் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆர்.கே.பேட்டை போலீசார் அம்மையார்குப்பம் கிராமத்தில் உள்ள திரையரங்கம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டம் பலிஜகண்டிகை என்ற கிராமத்தில் உள்ள ஓடையில் இருந்து சரக்கு ஆட்டோவில் மணல் கடத்தி வந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

மணலுடன் இருந்த சரக்கு ஆட்டோவை போலீசார் பறிமுதல் செய்தனர். ஆட்டோவை ஓட்டி வந்த அத்திமாஞ்சேரிபேட்டை காலனி பஜனை கோவிலை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

ஆரணி ஆறு

மீஞ்சூரை அடுத்த ஆரணிஆற்றில் மினி வேன் மூலம் மணல் கடத்தப்படுவதாக காட்டூர் போலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து காட்டூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போது பயனிகளை ஏற்றும் மினிவேனில் மணல் ஏற்றி கொண்டிருந்தது தெரியவந்தது. போலீசாரை கண்டதும் 2 பேர் தப்பிச்சென்று விட்டனர். ஒருவர் போலீசாரிடம் பிடிபட்டார். பிடிபட்டவர் பொன்னேரியை அடுத்த ஆலாடு பெரியகாலனியை சேர்ந்த ஜோதி (41) என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார் மினிவேனை பறிமுதல் செய்தனர்.

ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றில் சிலர் மணல் கடத்துவதாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நித்தியானந்தத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் போலீசாருடன் தொளவேடு பகுதியில் சோதனை செய்தார். அப்போது சிலர் ஆரணி ஆற்றில் இருந்து மணல் மூட்டைகளை ஆட்டோவில் அடுக்கி கொண்டிருந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

போலீசார் பாலேஸ்வரம் பகுதியில் சோதனை செய்த போது மாட்டு வண்டியில் மணல் நிரப்பி கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.

Next Story