தனித்தனி விபத்தில்: தொழிலாளி உள்பட 2 பேர் சாவு


தனித்தனி விபத்தில்: தொழிலாளி உள்பட 2 பேர் சாவு
x
தினத்தந்தி 11 Nov 2018 10:00 PM GMT (Updated: 11 Nov 2018 7:09 PM GMT)

தனித்தனி விபத்தில் தொழிலாளி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அரசூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஷேக்பாபு(வயது 54), தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு எடப்பாளையத்தில் இருந்து தனது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். எடப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற போது மடப்பட்டில் இருந்து திருக்கோவிலூர் நோக்கி சென்ற கார் ஒன்று ஷேக்பாபு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்து குறித்து விசாரணை நடத்தினர். பின்னர் விபத்தில் பலியான ஷேக்பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தியாகதுருகம் பேட்டை தெருவை சேர்ந்தவர் நடராஜன்(69). சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். தியாகதுருகம் பிரிவு சாலையில் பிரிதிவிமங்கலம் அருகே சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது கள்ளக்குறிச்சியில் இருந்து சென்னை நோக்கி சென்ற கார் ஒன்று நடராஜன் ஓட்டி வந்த மொபட் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்த தியாகதுருகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விபத்தில் பலியான நடராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து நடராஜனின் மகன் தணிகாசலம் தியாகதுருகம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான கார் டிரைவர் விருதுநகர் மாவட்டம் காரேந்தலை சேர்ந்த அப்துல்வாகித்(28) என்பவரை கைது செய்தனர்.


Next Story