குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து சாவு உறவினர்கள் போலீஸ் நிலையம் முற்றுகை


குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து சாவு உறவினர்கள் போலீஸ் நிலையம் முற்றுகை
x
தினத்தந்தி 13 Nov 2018 10:30 PM GMT (Updated: 13 Nov 2018 5:26 PM GMT)

விருகம்பாக்கத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கு கணவரே காரணம் எனக்கோரி உறவினர்கள் போலீஸ் நிலையம் முற்றுகையிட்டனர்.

பூந்தமல்லி,

விருகம்பாக்கம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குருதாஸ்(வயது 32). இவரது மனைவி சகானா(28). இவருக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள 5 வீடுகளில் இருந்து வரும் வாடகை பணத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். குடிப்பழக்கம் உடைய குருதாஸ்வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வருகிறார்.

இவரது வீட்டின் அருகே வசிக்கும் சகானாவின் அக்கா கவிதா என்பவருக்கும் குருதாசுக்கும் இடையே சொத்து தொடர்பாக நேற்று முன்தினம் காலை கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்து போன சகானா வீட்டுக்குள் சென்று உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டு அலறினார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் சகானாவின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் சகானா அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சகானா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுபற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது மகளின் சாவுக்கு கவிதா மற்றும் குருதாஸ் தான் காரணம் என்றும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனக்கோரி சகானாவின் தந்தை சிவா அவரது உறவினர்களுடன் விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டார்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story