கஜா புயலை சமாளிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் 2,297 தன்னார்வலர்கள் போலீஸ் சூப்பிரண்டு தகவல்


கஜா புயலை சமாளிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் 2,297 தன்னார்வலர்கள் போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 13 Nov 2018 10:45 PM GMT (Updated: 13 Nov 2018 7:26 PM GMT)

கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

திருவள்ளூர்,

கஜா புயலை சமாளிக்க திருவள்ளூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 297 தன்னார்வலர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர்களிடம் தொடர்பில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பொன்னி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கஜா புயல் காரணமாக தமிழகம் முழுவதும் மிதமான மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத்தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட காவல் அலுவலகத்தில் மாநில பேரிடர் மீட்புக்குழு பயிற்சி பெற்ற 33 காவலர்களுக்கு பேரிடர் காலத்தில் விரைந்து செயல்படுவது குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் இடர்பாடுகள் ஏற்படும் இடங்களுக்கு விரைந்து சென்று பிரச்சினைகளை எதிர்கொள்ள ஏதுவாக திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி போன்ற இடங்களில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 10 பேர் கொண்ட 5 அதிவிரைவு படைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருப்பார்கள்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 28 கடலோர கிராமங்களில், 56 தாழ்நிலை பகுதிகள் கண்டறியப்பட்டு இடர்காலங்களில் பொதுமக்களை உடனடியாக வெளியேற்ற மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்து 297 தன்னார்வலர்கள், அவரவர் பகுதிகளில் ஏற்படும் இடர்பாடுகளை சமாளிக்க கண்டறியப்பட்டு அவர்கள் அந்தந்த உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர்களிடம் தொடர்பில் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து கஜா புயலை எதிர்கொள்ள அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் யாரும் இது குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு பொன்னி, கஜா புயல் காரணமாக மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளும் மீட்பு உபகரணங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Next Story