நூற்பாலை அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு; மர்ம ஆசாமிகள் கைவரிசை


நூற்பாலை அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருட்டு; மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 18 Nov 2018 10:00 PM GMT (Updated: 18 Nov 2018 7:43 PM GMT)

மடத்துக்குளம் அருகே நூற்பாலை அதிபன் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.2 லட்சத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

மடத்துக்குளம்,

மடத்துக்குளம் அருகே உள்ள ஜே.எஸ்.ஆர்.நகரை சேர்ந்தவர் குமார். நூற்பாலை அதிபர். தினமும் காலையில் நூற்பாலைக்கு செல்லும் குமார், இரவு 9 மணிக்கு மேல்தான் வீடு திரும்புவார். சம்பவத்தன்று காலையில் நூற்பாலைக்கு குமார் சென்று விட்டார். இவருடைய மனைவி வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்று விட்டார்.

இதனால் இவர்களுடைய வீட்டின் கதவுகள் பூட்டப்பட்டு இருந்தன. இந்த நிலையில் நூற்பாலையில் இருந்து குமார், அந்த இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த குமார் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவில் உள்ள பூட்டும் உடைக்கப்பட்டு, பீரோ திறந்து கிடந்தது.

அப்போதுதான் மர்ம ஆசாமிகள், பீரோவில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடி சென்று இருப்பது தெரியவந்தது. இது குறித்து மடத்துக்குளம் போலீசில் புகார் செய்தார். இது பற்றிய தகவல்அறிந்ததும் மடத்துக்குளம் போலீசார் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

இது குறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது:–

மடத்துக்குளம் பகுதியில் தொடர்ந்து திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பூட்டிக்கிடக்கும் வீடுகளை நோட்டமிட்டு மர்ம ஆசாமிகள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுகிறார்கள். இதை தடுக்கவும், திருட்டில் ஈடுபடும் ஆசாமிகளை கண்டுபிடிக்கவும், முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story