குன்னம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 7 பேர் காயம் டிரைவர்கள் கைது


குன்னம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 7 பேர் காயம் டிரைவர்கள் கைது
x
தினத்தந்தி 18 Nov 2018 10:15 PM GMT (Updated: 18 Nov 2018 8:00 PM GMT)

குன்னம் அருகே வெவ்வேறு விபத்துகளில் 7 பேர் காயமடைந்தனர். டிரைவர்கள் கைது செய்யப் பட்டனர்.

குன்னம்,

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள டி.வி.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வீரபாண்டியன்(வயது 48). ஆட்டோ டிரைவரான இவர் தனது ஆட்டோவை அகரம் சீகூரில் இருந்து கீழபெரம்பலூர் கிராமத்திற்கு 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டு இருந்தார். அப்போது கருப்பட்டாங்குறிச்சி கிராமம் அருகே வந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரியும், ஆட்டோவும் மோதிக்கொண்டன. இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ டிரைவர் மற்றும் அமுதா(62), ஜெகதாம்பாள்(55), சோமு(65), வசந்தா(40), அம்சவள்ளி(50) ஆகியோர் காயம் அடைந்தனர். காயம் அடைந்த அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக லாரி டிரைவர் தஞ்சாவூரை சேர்ந்த கார்த்திக்கை(32) குன்னம் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார்(30). இவர் குன்னம் பஸ் நிலையத்தில் இருந்து அண்ணா நகர் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பெட்ரோல் பங்க் அருகே ரோட்டை கடக்கும் போது அந்த வழியாக வந்த வேன் எதிர்பாராதவிதமாக சிவக்குமார் மீது மோதியது. இதில் அவர் காயம் அடைந்தார். இதுதொடர்பாக வேன் டிரைவர் துறையூரை சேர்ந்த அமுதாஞ்சனை(29) குன்னம் போலீசார் கைது செய்தனர்.

Next Story