கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் ரத்து என்ற அறிவிப்பால் பயணிகள் குழப்பம்


கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் ரத்து என்ற அறிவிப்பால் பயணிகள் குழப்பம்
x
தினத்தந்தி 18 Nov 2018 11:00 PM GMT (Updated: 18 Nov 2018 10:05 PM GMT)

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் ரத்து என்ற அறிவிப்பால் பயணிகள் குழப்பம் அடைந்தனர்.

கடலூர்,

கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் ரெயில்கள் ரத்து என்ற அறிவிப்பால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர். கஜா புயல் கடந்தும் அதிகாரிகள் அலட்சியத்துடன் செயல்படுவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

கஜா புயலையொட்டி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வழியாக இயக்கப்படும் காரைக்கால்- சென்னை எழும்பூர் ரெயில், வேளாங்கண்ணியில் இருந்து சென்னை எழும்பூர் இணைப்பு ரெயில், மன்னார்குடியில் இருந்து சென்னை எழும்பூர் செல்லும் மன்னை எக்ஸ்பிரஸ், தஞ்சை- சென்னை எழும்பூர் உழவன் எக்ஸ்பிரஸ், விழுப்புரம்- மயிலாடுதுறை இரு மார்க்கங்களிலும் செல்லும் பயணிகள் ரெயில் கடந்த 15-ந்தேதி ரத்து செய்யப்பட்டது

இது தவிர திருச்சியில் இருந்து திருப்பாதிரிப்புலியூர் வரும் பயணிகள் ரெயில் 15-ந்தேதியும், திருப்பாதிரிப்புலியூரில் இருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரெயில் 16-ந்தேதியும் பகுதிநேரமாக ரத்து செய்யப்பட்டது. இது மட்டுமின்றி சென்னை எழும்பூரில் இருந்து கடலூர் வழியாக திருச்செந்தூர் வரை செல்லும் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூருக்கு வராமல் விழுப்புரம், விருத்தாசலம் வழியாகவும், ராமேஸ்வரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் ரெயில் கடலூருக்கு வராமல் திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாகவும், ராமேஸ்வரம்- சென்னை எழும்பூர் விரைவு ரெயில் கடலூருக்கு வராமல் மாற்று பாதையாக திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம் வழியாகவும் கடந்த 15-ந்தேதி இயக்கப்பட்டது.

இது பற்றிய அறிவிப்பை பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்தில் கடந்த 15-ந்தேதி முதல் டிஜிட்டல் பெயர் பலகையில் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் அனைத்து ரெயில்களும் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வழியாக இயக்கப்படுகிறது. ஆனால் இது வரை அந்த அறிவிப்பு பலகையை மாற்றவில்லை. நேற்றும் அனைத்து ரெயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பலகையில் அறிவிப்பு ஓடிக்கொண்டிருந்தது.

இதனால் பயணிகள் குழப்பம் அடைந்தனர். சிலர் ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். ஒரு சிலர் ரெயில் நிலைய அதிகாரிகளிடம் கேட்டு, டிக்கெட் வாங்கி ரெயில்களில் சென்றதை காண முடிந்தது. ரெயில்வே ஊழியர்களின் இந்த அலட்சியத்தால் ரெயில் பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். டிஜிட்டர் பெயர் பலகையை திருத்தம்செய்ய வேண்டும் என்ற பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story