தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை மத்திய குழுவினர் இன்று பார்வையிட்டு ஆய்வு


தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை மத்திய குழுவினர் இன்று பார்வையிட்டு ஆய்வு
x
தினத்தந்தி 24 Nov 2018 11:27 PM GMT (Updated: 25 Nov 2018 12:19 AM GMT)

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை மத்திய குழுவினர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை மத்திய குழுவினர் இன்று(ஞாயிற்றுக்கிழமை) பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்கள். நாளை(திங்கட்கிழமை) நாகை மாவட்டத்திற்கு செல்கிறார்கள்.

‘கஜா’ புயல் தாக்கியதில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்கள் கடுமையான சீரழிவை சந்தித்து உள்ளன. இந்த புயலுக்கு ஏராளமானோர் இறந்து விட்டனர். இந்த மாவட்டங்களில் இருந்த லட்சக்கணக்கான தென்னை மரங்கள், பழமைவாய்ந்த பல்வேறு மரங்கள் வேராடு சாய்ந்தன. இது தவிர வாழை, நெல், சோளம், மரவள்ளி உள்பட பல்வேறு பயிர்கள், வெற்றிலை கொடிக்கால்கள் அனைத்தும் நாசம் அடைந்தன.

இந்த மூன்று மாவட்டங்களிலும் இருந்த லட்சக்கணக்கான குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள், ஆயிரக்கணக்கான படகுகள் அனைத்தும் சேதம் அடைந்தன. மேலும் ஏராளமான மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் சாய்ந்து விட்டன. துணை மின் நிலையங்கள் சேதம் அடைந்தன.

வீடு, வாசல், உடைமைகளை இழந்தவர்கள் ஆங்காங்கே நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு அரசின் சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் சார்பில் மட்டுமல்லாது பல்வேறு தனியார் அமைப்புகளின் சார்பிலும் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

புயல் தாக்கி நேற்று வரையில் 9 நாட்களாகியும் மின்சாரம், குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தராததை கண்டித்து பாதிக்கப்பட்டவர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்குவதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுக்கோட்டை வந்து அங்கு புயல் சேத பகுதிகளை பார்வையிட்டார். தொடர்ந்து அங்கிருந்து தஞ்சை வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு புயலால் இறந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர், நாகை மாவட்டங்களில் வெள்ள சேத பகுதிகளை பார்வையிடுவதற்காக முதல்-அமைச்சர் பழனிசாமி திருவாரூர் வந்தார். அப்போது மழை பெய்ததாலும், மோசமான வானிலை காரணமாகவும் அவர் வந்த ஹெலிகாப்டர் திருவாரூரில் தரை இறங்க முடியாததால் திருவாரூர், நாகை மாவட்டங்களில் பயண திட்டத்தை ரத்து செய்து விட்டு மீண்டும் திருச்சிக்கு புறப்பட்டு சென்றார்.

இதனைத்தொடர்ந்து புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்கு தேவையான நிதியை கேட்பதற்காக புதுடெல்லி புறப்பட்டு சென்ற முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து பேசினார்.

அப்போது புயல் நிவாரணம் மற்றும் மீட்பு பணிகளுக்காக ரூ.15 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்றும், தற்காலிக சீரமைப்புக்காக உடனடியாக ரூ.1500 கோடி வழங்க வேண்டும் என்றும் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார். மேலும் புயலால் சேதம் அடைந்த பகுதிகளை உடனடியாக மத்திய குழு பார்வையிட்டு சேத விவரங்களை கணக்கிட்டு நிவாரணத்தை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தமிழகத்துக்கு குழு ஒன்றை அனுப்பி அறிக்கை கேட்க முடிவு செய்தது. இதனைத்தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை செயலாளர்(நீதி) டேனியல் ரிச்சர்டு தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது. இந்த குழுவில் மத்திய நிதித்துறை(செலவினங்கள்) அமைச்சகத்தின் ஆலோசகர் ஆர்.பி.கவுல், வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் நலத்துறையின்(ஐதராபாத்) இயக்குனர்(பொறுப்பு) பி.கே.ஸ்ரீவத்சவா, மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சக துணை செயலாளர் மாணிக்சந்திர பண்டிட், மத்திய எரிசக்தித்துறை தலைமை பொறியாளர் வந்தனா சிங்கால், மத்திய நீர் ஆதாரத்துறை இயக்குனர் ஜெ.ஹர்ஷா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சக கண்காணிப்பு பொறியாளர் ஆர்.இளங்கோவன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தனர்.

நேற்று காலை சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய குழுவினர் சந்தித்து பேசினர். பின்னர் சென்னையில் இருந்து விமானம் மூலம் இக்குழுவினர் திருச்சி வந்தனர். தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த இக்குழுவினர் அங்கிருந்து தஞ்சை வந்தனர். இரவு தஞ்சை சங்கம் ஓட்டலில் தங்கினர்.

இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி அளவில் தஞ்சை சங்கம் ஓட்டலில் காலை உணவை முடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு செல்லும் மத்திய குழுவினர், தஞ்சை மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்டு உள்ள பல்வேறு பகுதிகளில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசுகின்றனர்.

மதியம் 1 மணிக்கு மீண்டும் தஞ்சை சங்கம் ஓட்டலுக்கு திரும்புகின்றனர். அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு மீண்டும் 2 மணி அளவில் தஞ்சையில் இருந்து புறப்பட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு வெள்ள சேத பகுதிகளை பார்வையிட செல்கிறார்கள். மாலை 3.30 மணி முதல் இந்த மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் புயல் சேத பகுதிகளை பார்வையிட்டு விட்டு இரவு 8 மணிக்கு திருவாரூரில் இருந்து நாகை புறப்பட்டு செல்கிறார்கள். இரவு நாகப்பட்டினத்தில் உள்ள ஒரு ஓட்டலில் இக்குழுவினர் தங்குகிறார்கள்.

நாளை(திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு காலை உணவை முடித்துக்கொண்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் புயல் சேத பகுதிகளை பார்வையிடுறார்கள். மதியம் 1 மணி அளவில் ஓட்டலுக்கு திரும்பும் இக்குழுவினர் அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்கள். பின்னர், பிற்பகல் 2.30 மணிக்கு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் ஆய்வு செய்து விட்டு இரவு புதுச்சேரி செல்கின்றனர்.





Next Story