திருமங்கலம் 100 அடி சாலையில் பள்ளி மாணவர்கள் வரும் வாகனங்கள் செல்ல வழி அமைக்க கோரிக்கை


திருமங்கலம் 100 அடி சாலையில் பள்ளி மாணவர்கள் வரும் வாகனங்கள் செல்ல வழி அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 2 Dec 2018 10:00 PM GMT (Updated: 2 Dec 2018 8:13 PM GMT)

திருமங்கலம் 100 அடி சாலையில் பள்ளி மாணவர்கள் வரும் வாகனங்கள் திரும்புவதற்கு வழி அமைக்க வேண்டும் என்று பள்ளி முதல்வர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை,

சென்னை திருமங்கலத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கேந்திர வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகள் படிக்கிறார்கள்.

அண்ணாநகர், ஆவடி, பெரம்பூர், பாடி, புரசைவாக்கம் உள்பட பல்வேறு இடங்களில் இருந்து மாணவர்கள் பள்ளிக்கூடத்துக்கு வருகிறார்கள்.

திருமங்கலம் 100 அடி சாலை வழியாக பள்ளி மாணவர்கள் வரும் வாகனங்கள் வலதுபுறம் திரும்புவதற்கு வழி இல்லாததால், கோயம்பேடு சென்று திரும்பி வர வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதன் காரணமாக ஒரு கி.மீ. தொலைவுக்கு வீண் அலைச்சல், கால விரயம் ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்களை அழைத்து வரும் ஆட்டோ, வேன், கார் டிரைவர்களும், மோட்டார் சைக்கிளில் அழைத்து வரும் பெற்றோர்களும் திருமங்கலம் மேம்பாலத்தின் கீழே ஆபத்தை உணராமல் ஒரு வழிப்பாதையில் பயணிக்கின்றனர்.

குறிப்பாக அதிக அளவில் பெண்கள் தங்கள் பிள்ளைகளை மொபட்டில் அழைத்து வருகிறார்கள். ஒரு வழிப்பாதையில் இரண்டு பக்கமும் தாறுமாறாக வாகனங்கள் செல்வதால் விபத்துகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. மேலும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது.

சாலையில் நடுவே அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரில் உள்ள குறுகிய இடைவெளியில் புகுந்து அபாயகரமான முறையில் பள்ளி மாணவர்களும், வேலைக்கு செல்லும் பெண்களும், பாதசாரிகளும் சாலையை கடக்க வேண்டிய நிலை உள்ளது.

இதுதொடர்பாக கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் எஸ்.வல்லபன் கூறியதாவது:-

திருமங்கலம் மேம்பாலம் முடியும் இடத்தில் 100 மீட்டர் தொலைவில் வாகனங்கள் திரும்பும் வகையில் வழி அமைத்து கொடுத்தால், இப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும். இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர், போலீஸ் கமிஷனர், போக்குவரத்து இணை கமிஷனர் உள்பட பலருக்கும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணித்து வருவது மிகுந்த மனவேதனையை அளித்து வருகிறது. அசம்பாவித சம்பவங்கள் நேரிடும் முன்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர் மற்றும் என்னுடைய எதிர்பார்ப்பும், கோரிக்கையும் ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story