குழந்தை கழுத்தை நெரித்து கொலை கள்ளக்காதலனுக்கு பிறந்ததால் கொன்றதாக தாய் பகீர் வாக்குமூலம்


குழந்தை கழுத்தை நெரித்து கொலை கள்ளக்காதலனுக்கு பிறந்ததால் கொன்றதாக தாய் பகீர் வாக்குமூலம்
x
தினத்தந்தி 4 Dec 2018 11:15 PM GMT (Updated: 4 Dec 2018 8:57 PM GMT)

குளித்தலை அருகே கள்ளக்காதலுனுக்கு குழந்தை பிறந்ததால் கழுத்தை நெரித்து கொன்றதாக தாய் பகீர் வாக்குமூலம் அளித்தார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள பரளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகள் ரம்யா (வயது 25). இவருக்கும், திருச்சி மாவட்டம் கொளக்குடி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவருக்கும், கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணமான 3 மாதங்களிலேயே கருத்துவேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து பரளியில் உள்ள தனது பெற்றோருடன் ரம்யா வசித்து வந்துள்ளார். இந்தநிலையில் கணவனை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்த ரம்யா, திருமணத்திற்கு முன்பு தான் காதலித்து வந்த மணிமாறனிடம் (25) மீண்டும் பழகி வந்துள்ளார். இதனால் ரம்யாவிற்கு கடந்த 2016-ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது. வேதவர்ஷினி என்று அந்த பெண் குழந்தைக்கு பெயர் வைத்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று ரம்யாவின் வீட்டில் குழந்தை வேதவர்ஷினியின் கதறல் சத்தம் கேட்டதால் அப்பகுதியை சேர்ந்த சிலர் ரம்யா வீட்டுக்கதவை தட்டினர். அப்போது ரம்யா கதவை திறந்ததையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது, குழந்தை வேதவர்சினி கழுத்து நெரிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த 108 ஆம்புலன்சு ஊழியர்கள் குழந்தையை பார்த்தபோது அது ஏற்கனவே இறந்தது தெரியவந்தது.

இதையடுத்து குளித்தலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வேதவர்ஷியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் ரம்யா தான் மண்எண்ணெய் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக அங்கிருந்தவர்களிடம் கூறியதையடுத்து, அவர் சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த கொலை சம்பவம் குறித்து ரம்யா, ராஜேந்திரம் கிராம நிர்வாக அதிகாரி விஜயாவிடம் கூறுகையில், திருமணத்திற்கு முன்பே இப்பகுதியைச் சேர்ந்த மணிமாறனை காதலித்து வந்தேன். திருமணமாகி சில மாதங்களில் கணவரைவிட்டு பிரிந்து வந்தபின், பெற்றோருடன் இருந்தபோது தொடர்ந்து மீண்டும் மணிமாறனுடன் நெருங்கி பழகியதால், தனக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்தநிலையில் மணிமாறனுடன் தகராறு ஏற்பட்டதால் அவர் மீதுள்ள ஆத்திரத்தில் நேற்று வேதவர்ஷினியை அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தேன். பின்னர் நானும் தற்கொலை செய்து கொள்வதற்காக மண்எண்ணெய் குடித்தேன் என்று கூறினார். இதையடுத்து கிராமநிர்வாக அதிகாரி குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரம்யா கூறியதை வாக்குமூலமாக பெற்று கொண்டனர். பெற்ற குழந்தையை தாயே கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story