ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,103 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்


ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,103 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் - அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்
x
தினத்தந்தி 4 Dec 2018 11:30 PM GMT (Updated: 4 Dec 2018 10:08 PM GMT)

ஓசூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1,103 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி வழங்கினார்.

ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி, மாவட்ட கலெக்டர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது. இதற்கு, ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ், தாசில்தார் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் பால கிருஷ்ணரெட்டி கலந்து கொண்டு, 1,103 மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எண்ணற்ற நலத்திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.

கல்விக்காகவும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இலவச சைக்கிள், சீருடை, பஸ்பாஸ், பாடப்புத்தகம், விலையில்லா மடிக்கணினி மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், மாணவிகள் போட்டிகளை எதிர்கொள்ள ஸ்மார்ட் வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி மட்டுமின்றி, விளையாட்டிலும் மாணவிகள் சிறந்து விளங்க வேண்டும் என்றார்.

இதில், பள்ளியின் பெற்றோர், ஆசிரியர் கழக தலைவர் அரப்ஜான், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைவர் கே.நாராயணன், பள்ளி தலைமை ஆசிரியை லதா, ஓசூர் நகர அ.தி.மு.க. செயலாளர் எஸ்.நாராயணன், நகர்மன்ற முன்னாள் உறுப்பினர்கள் அசோகா, முரளி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், உதவி தலைமை ஆசிரியை தேவசேனா நன்றி கூறினார்.



Next Story