புதுக்கோட்டையில் தெற்கு சந்தைப்பேட்டை பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு


புதுக்கோட்டையில் தெற்கு சந்தைப்பேட்டை பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு
x
தினத்தந்தி 5 Dec 2018 10:30 PM GMT (Updated: 5 Dec 2018 9:28 PM GMT)

புதுக்கோட்டையில் உள்ள தெற்கு சந்தைப்பேட்டை பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தின் பின்புறம் தெற்கு சந்தைப்பேட்டை பகுதி உள்ளது. இந்த பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த பகுதியில் குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் சில அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு உள்ளது. இந்த குடியிருப்புகளில் இருந்து முறையாக கழிவுநீர் வெளியேறாததால் ஆங்காங்கே குளம்போல் தேங்கி உள்ளது. இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ரூ.3 கோடி மதிப்பீட்டில் 30 குடியிருப்புகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடம் கட்ட கலெக்டர் கணேஷ் தலைமையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடுக்கு மாடி கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு, முதற்கட்டமாக பள்ளங்கள் தோண்டப்பட்டன.

இந்நிலையில் கஜா புயல் மற்றும் தொடர்ந்து புதுக்கோட்டையில் அவ்வப்போது பெய்து வரும் மழையின் காரணமாக சந்தைப்பேட்டை பகுதியில் புதிய அடுக்குமாடி கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட பள்ளங்கள் மற்றும் அந்த பகுதியில் மழைநீர் குளம்போல் தேங்கியது. மேலும் அந்த பகுதியில் உள்ள கழிவுநீரும் மழைநீருடன் சேர்ந்து உள்ளது. இதேபோல அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் முன்பு கழிவுநீர் குளம்போல் தேங்கி உள்ளது. அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது.

இந்த கழிவுநீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை கடிப்பதால், அவர்களுக்கு பல்வேறு வகையாக நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தேங்கி நிற்கும் மழைநீர் மற்றும் கழிவுநீரை அகற்றி, மீண்டும் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் விரைந்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தை கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். 

Next Story