அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு வேலூர் மத்திய ஜெயிலில் கைதி தற்கொலை முயற்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை


அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு வேலூர் மத்திய ஜெயிலில் கைதி தற்கொலை முயற்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 10 Dec 2018 10:15 PM GMT (Updated: 10 Dec 2018 4:14 PM GMT)

வேலூர் மத்திய ஜெயிலில் தண்டனை கைதி அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வேலூர், 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகேயுள்ள சிங்காரபேட்டையை சேர்ந்தவர் சின்னப்பையன் (வயது 49). இவர் பெண்களிடம் கத்தியை காட்டி வழிப்பறி, செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த வழக்குகளில் அவருக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சின்னப்பையன் கடந்த 2012-ம் ஆண்டு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் அனைத்து கைதிகளும் தூங்கினர். அப்போது சின்னப்பையன் அவரது அறையில் தங்கியிருந்த மற்றொரு கைதி உடல் நலக்குறைவு காரணமாக வாங்கி வைத்திருந்த அனைத்து மாத்திரைகளையும் எடுத்து சாப்பிட்டு உள்ளார்.

அதையடுத்து சிறிது நேரத்தில் அவர் மயங்கி கீழே விழுந்தார். மேலும் அவரது வாயில் இருந்து நுரைதள்ளியதாக கூறப்படுகிறது. அதனால் அதிர்ச்சி அடைந்த சக கைதிகள் இதுகுறித்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சிறைத்துறை அதிகாரிகள் உடனடியாக அங்கு வந்து சின்னப்பையனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சின்னப்பையன் மனஅழுத்தம் காரணமாக அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என சிறைத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் வேலூர் மத்திய ஜெயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story