எட்டயபுரத்தில் பாரதியார் வேடம் அணிந்த மாணவர்கள் ஊர்வலம்


எட்டயபுரத்தில் பாரதியார் வேடம் அணிந்த மாணவர்கள் ஊர்வலம்
x
தினத்தந்தி 11 Dec 2018 10:00 PM GMT (Updated: 11 Dec 2018 12:35 PM GMT)

பாரதியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, எட்டயபுரத்தில் அவரது வேடம் அணிந்த மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

எட்டயபுரம், 

பாரதியார் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, எட்டயபுரத்தில் அவரது வேடம் அணிந்த மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

பாரதியார் பிறந்த நாள் விழா

‘மகாகவி’ சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, எட்டயபுரம் பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு கோவில்பட்டி உதவி கலெக்டர் விஜயா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர், அவர் பிறந்த இல்லத்தில் உள்ள மார்பளவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தாசில்தார் வதனாள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மாணவர்கள் ஊர்வலம்

பாரதியார் அரசவை கவிஞராக பணியாற்றிய எட்டயபுரம் சமஸ்தான அரண்மனை முன்பு அவரை போன்று வேடம் அணிந்த 137 மாணவர்கள் பாடல்களை பாடி, வந்தே மாதரம் கோ‌ஷம் எழுப்பினர்.

பின்னர் புத்தக வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தவும், நூலகங்களை பயன்படுத்தி அறிவை பெருக்கி கொள்ளவும், தேசப்பற்று, தேசப்பக்தியை வளர்க்கவும் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர். பின்னர் அங்கிருந்து மாணவர்கள் பாரதியாரின் பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக அவர் பிறந்த இல்லத்துக்கு சென்றனர்.

பாரதியாரின் பாடல்களுக்கு கோலாட்டம் ஆடியும், அவருடைய உருவ படத்துடன் கூடிய பல்லக்கை அவரது இல்லத்துக்கு மாணவர்கள் தூக்கியும் வந்தனர். பாரதியார் பிறந்த இல்லத்தில் உள்ள அவரது மார்பளவு சிலைக்கு மாணவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் ரோட்டரி சங்க தலைவர் பாபு, செயலாளர் ரவி மாணிக்கம், பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், வைகை இலக்கிய கழக தலைவர் சிதம்பர பாரதி, எழுத்தாளர் அருணகிரிநாதன், மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) ராம் சங்கர்,

பாரதி ஆய்வாளர் பொன் பரமானந்தம், கண்ணன், மோகன், முத்துசெல்வன், கவி பாண்டியன், பால்ராஜ் மற்றும் எட்டயபுரம் தமிழ் பாப்திஸ்து தொடக்கப்பள்ளி, மாரியப்ப நாடார் நடுநிலைப்பள்ளி, கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story