கோரிக்கைகளை வலியுறுத்தி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்


கோரிக்கைகளை வலியுறுத்தி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 11 Dec 2018 10:45 PM GMT (Updated: 11 Dec 2018 9:55 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கினர்.

திருவெறும்பூர்,

திருவெறும்பூர் அருகே, மத்திய பாதுகாப்பு துறை நிறுவனங்களில் ஒன்றான துப்பாக்கி தொழிற்சாலை உள்ளது. இங்கு ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பணிகளுக்கு துப்பாக்கிகள் தயாரிக்கப்படுகின்றன. இந்த தொழிற்சாலையில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்கம் சார்பில் நேற்று 4 பேர், தொழிற்சாலை முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். சங்கத்தின் தலைவர் வேதநாயகம் தலைமையில் இணை செயலாளர் பாஸ்கர், உதவி செயலாளர் பாஸ்கர் ஆரோக்கியதாஸ், அமைப்பு செயலாளர் போப்ஜேக்கப் ஆகிய 4 பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்திரசேகரன் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

தொழிற்சாலை நிர்வாகம் அனைத்து பிரிவிற்கும், போதுமான உற்பத்தி இலக்கை வழங்க வேண்டும். தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதையும், தொழிற்சங்க பிரதிநிதிகளை பழிவாங்கும் போக்கையும் தொழிற்சாலை நிர்வாகம் கைவிட வேண்டும்.

தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு ஏற்படும் வகையில் செயல்படும் போக்கை கைவிட வேண்டும். காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு தொழிற்சாலை ஊழியர்கள் சிலரும் ஆதரவு தெரிவித்தனர். 

Next Story