கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராக பிரதாப்சந்திரஷெட்டி மனு தாக்கல் - இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்


கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கு காங்கிரஸ் வேட்பாளராக பிரதாப்சந்திரஷெட்டி மனு தாக்கல் - இன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார்
x
தினத்தந்தி 11 Dec 2018 10:45 PM GMT (Updated: 11 Dec 2018 10:45 PM GMT)

கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் வேட்பாளராக பிரதாப்சந்திரஷெட்டி மனு தாக்கல் செய்தார். அவர் இன்று(புதன்கிழமை) போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மேல்-சபை தலைவராக இருந்தவர் சங்கரமூர்த்தி. கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவருடைய பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் ஓய்வு பெற்றார். இதையடுத்து மேல்-சபை தற்காலிக தலைவராக ஜனதா தளம்(எஸ்) கட்சியை சேர்ந்த பசவராஜ் ஹொரட்டி நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கர்நாடக மேல்-சபை தலைவர் பதவிக்கு 12-ந் தேதி(அதாவது இன்று) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. மேல்-சபை தலைவர் பதவியை பசவராஜ் ஹொரட்டிக்கு விட்டுக்கொடுக்குமாறு கூட்டணி கட்சியான காங்கிரசிடம் ஜனதா தளம்(எஸ்) கேட்டுக் கொண்டது. ஆனால் அக்கட்சி, அந்த பதவியை விட்டுக்கொடுக்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில் காங்கிரசில் மேல்-சபை தலைவர் பதவியை தனக்கு வழங்குமாறு முன்னாள் மந்திரி எஸ்.ஆர்.பட்டீல் கேட்டார். அந்த பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருந்தார்.

இந்த நிலையில் கட்சி மேலிடம் உத்தரவிட்டதை அடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக பிரதாப்சந்திரஷெட்டி நேற்று பெலகாவியில், மேல்-சபை செயலாளரிடம் மனுவை தாக்கல் செய்தார்.

அப்போது துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். அவரை எதிர்த்து யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

அவர் இன்று(புதன்கிழமை) மேல்-சபை தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். மனு தாக்கல் செய்த பிறகு பிரதாப்சந்திரஷெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மேல்-சபை தலைவர் பதவிக்கு போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. கட்சி மேலிடத்தின் உத்தரவுப்படி நான் மனு தாக்கல் செய்துள்ளேன்.

இது எனக்கு ஆச்சரியமாக உள்ளது. என்னை அடையாளம் கண்டு மேலிடம் இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியுள்ளது. கட்சியில் உழைத்தவர்களுக்கு வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கு நானே சாட்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story