இளம்பெண்ணிடம் நகை பறிப்பு: மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை


இளம்பெண்ணிடம் நகை பறிப்பு: மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் கைவரிசை
x
தினத்தந்தி 12 Dec 2018 10:00 PM GMT (Updated: 12 Dec 2018 8:54 PM GMT)

இளம்பெண்ணிடம், மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூரில் இளம்பெண்ணிடம், மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர்-அவினாசி ரோடு காந்திநகரை அடுத்த இ.பி.காலனி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவருடைய மனைவி லிசா (வயது 27). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து லிசா வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர் லிசா அருகில் சென்றுள்ளனர். அப்போது திடீரென மோட்டார்சைக்கிளில் பின்னால் உட்கார்ந்திருந்த ஆசாமி, லிசா கழுத்தில் கிடந்த 6½ பவுன் சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் சங்கிலியை இறுக்கமாக பிடித்துக்கொண்டார். ஆனாலும் சங்கிலியின் ஒரு பகுதி மர்ம ஆசாமியின் கைக்கு சென்றது. இதையடுத்து லிசா “திருடன் திருடன்” என்று கூச்சல் போட்டுள்ளார். ஆனால் கண் இமைக்கும் நேரத்தில் மர்ம ஆசாமிகள் பாதி சங்கிலியுடன் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் லிசா புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சியை கைப்பற்றி மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.



Next Story